ஒரு வழியாக பிரச்சினை தீர்ந்தது.. கிராம மக்களுக்கு கிணற்றை தானமாக கொடுத்தார் ஓ.பி.எஸ்!
சென்னை: சர்ச்சைக்குரிய கிணற்றை லட்சுமிபுரம் கிராம மக்களுக்களிடம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்படைத்தார்.
தேனி மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் விவசாயத்துக்காக அவரின் நிலத்தில் ராட்சத கிணறு ஒன்றை அமைத்தார். இதனால் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வந்த கிராம மக்களுக்கும் இந்த கிணற்றால் மேலும் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, லட்சுமிபுரம் கிராமத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் ஓபிஎஸ் யின் கிணற்றை ஒப்படைக்கும்படி பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வந்தனர்.
இப்போராட்டம் தமிழக அளவில் பெரும் சர்ச்சை கிளப்ப, ஓபிஎஸ், லட்சுமிபுரம் கிராம மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கிணற்றை கிராம மக்களுக்கு ஒப்படைக்க ஒப்புக் கொண்டார். இன்று ஒருவழியாக பத்திரப்பதிவு நிறைவடைந்தது. பொது பயன்பாடுக்கு தானமாக அளிக்கப்படுவதாக பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.