வெள்ளம் எதிரொலி: மேற்கு தாம்பரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 110 வீடுகள் இடிப்பு
சென்னை: மேற்கு தாம்பரத்தில் ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 110 வீடுகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இடித்து தள்ளப்பட்டன.
கடந்த சில வாரங்களாக பெய்த கனமழைக்கு சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தளித்து. பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி அளித்தது. தொடர் மழையினாலும், வெள்ள நீர் வடியாத காரணத்தாலும் ஏராளமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் இன்னும் மழை நீர் வடியாததால் சில பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம், முடிச்சூர் வேளச்சேரி, அய்யப்பன்தாங்கல், உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில், நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையினால் ஏற்பட்ட வெள்ள நீர் செல்ல வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததற்கு தாழ்வான பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டிருந்ததும் எனவும் முறையான வடிகால் அமைக்காததே காரணம் எனவும் பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தாம்பரம், அம்பேத்கர் புதுநகரில் பாப்பன் கால்வாய் கரையோரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், ஓடைப்புறம்போக்கு நிலத்தில் வீடுகளை கட்டியதால் வெள்ளம் ஏற்பட்டதாகவும் காஞ்சிபுரம் ஆட்சியர் கஜலட்சுமிக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரையடுத்து, ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 110 வீடுகளும் 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 3 மணி நேரத்தில் இடித்துத் தள்ளப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி உத்தரவின்பேரில் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். வீடுகளை இழந்தோருக்கு மாற்று குடியிருப்பு வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.