மகாராஷ்டிராவில் ஓகி புயல் : தமிழகத்திற்கு வெங்காய வரத்து பாதிக்குமா? வியாபாரிகள் அச்சம்
தமிழகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள ஓகி புயல் மகாராஷ்டிராவை நோக்கி நகர்ந்து வருகிறது.
சென்னை: கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஓகி புயல் தற்போத மகாராஷ்டிரா மாநிலத்தை நெருங்கி உள்ளது.
குமரி அருகே கடலில் உருவான ஓகி புயலால் தென் மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்தப் புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பலத்த சேதமடைந்துள்ளது. அதுபோல, கேரளாவின் கடலோரப் பகுதிகளும் இந்தப் புயலால் கடும் சேதத்தை சந்தித்து உள்ளது.
தற்போது இந்த ஓகி புயல் மகாராஷ்டிரா மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வெங்காய வரத்தும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, தமிழகத்தில் உள்ளூர் வெங்காய வரத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே நின்றுவிட்டது. கர்நாடகாவில் இருந்தும் பெரிய அளவில் வரத்து இல்லாததால், மகாராஷ்டிராவில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வெங்காய விலை கிலோ 140 முதல் 160 ரூபாய் வரை உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்திய ஓகி புயல் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தை நோக்கிச் செல்வதால், அங்கு பலத்த மழை பெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், அங்கு வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டால் தமிழகத்திற்கு வரும் வெங்காய வரத்து குறையும் என்றும் இதனால், விலை அதிகரிக்கலாம் என்றும் வியாபாரிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.