டாஸ்மாக் "வெற்றி ரகசியத்தை" அறிய வந்த ஒடிசா அதிகாரிகள்.. குடிகாரர்களிடம் ஆய்வு!!!
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்படி இப்படி வெற்றிகரமாக இயங்குகின்றன என்பதைப் பார்வையிடுவதற்காக ஒடிசா மாநிலத்திலிருந்து ஒரு குழு சென்னை வந்துள்ளது.
ஒடிசா மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய இக்குழுவினர் கடைகளுக்கு நேரில் போய் மது விற்பனை எப்படி நடக்கிறது, ஊழியர்கள் எப்படி விற்பனை செய்கிறார்கள், மது வாங்குவோரின் ஆர்வம் உள்ளிட்டவற்றை நேரில் பார்த்து ஆய்வு செய்தனர்.
மேலும் பார்களுக்கும் போய் அங்கு என்னெல்லாம் வசதிகள் குடிகாரர்களுக்குச் செய்து கொடுக்கப்படுகிறது என்றும் ஆய்வு நடத்தினர். சில குடிகாரர்களையும் சந்தித்து நீங்க எப்படி குடிக்கிறீங்க, உங்களுக்கு என்ன மாதிரியா சரக்கெல்லாம் கிடைக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களயும் கேட்டறிந்தனர்.
அள்ளித் தரும் அரசு
தமிழகம் முழுவதும் மதுக் கடைகளை அரசே நடத்தி வருகிறது. டாஸ்மாக் மூலம் மாநிலம் முழுக்க 6823 கடைகளைத் திறந்து வைத்து அதன் மூலம் குடிகாரர்களுக்கு மது சப்ளை செய்கிறது அரசு.
விதம் விதமான மது
பீர், விஸ்கி, பிராந்தி என விதம் விதமான மது வகைகள் இந்தக் கடைகளில் கிடைக்கிறது. பெண்களையும் மது அருந்த "ஊக்குவிக்கும்" வகையில் ஷாப்பிங் மால்களிலும் கடைகளைத் திறந்து வைத்துள்ளனர். இங்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் வந்து வாங்கி்ச் செல்வதைக் காண முடிகிறது.
வந்து குவியும் பணம்
மதுக் கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 21,000 கோடிக்கு மேல் வருமானம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. தற்போது விலையை வேறு ஏற்றி வி்ட்டதால் இந்த வருமானம் மேலும் அதிகரிக்கும் .
ஒடிசாவிலிருந்து வந்த குழு
இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்படி இயங்குகின்றன என்பதைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ஒடிசா அரசு அதிகாரிகள் அடங்கிய குழு சென்னைக்கு வந்துள்ளது.
கொள்முதல் எப்படி.. வியாபாரம் எப்படி...
எந்த முறையில் மதுபான பாட்டில்களை கொள்முதல் செய்கிறார்கள்? எத்தனை விதமான மதுபான ரகங்களை விற்பனை செய்கிறார்கள்? அந்த மதுபானங்களை கடைகளில் எப்படி விநியோகம் செய்கிறார்கள்? எவ்வளவு நேரம்? எந்த வகையில் விற்பனை செய்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வதற்காக இவர்கள் வந்துள்ளனர்.
கடையில் ஆய்வு.. மது பாரில் ஆய்வு
சென்னையில் நேற்று இந்த குழு சில கடைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் பார்களில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் பார்வையிட்டனர்.
குடிகாரர்களிடம் ஒரு லைவ் பேட்டி!
பின்னர், மதுபானங்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களிடமும் அவர்கள் டாஸ்மாக் மதுபானக்கடைகள் குறித்து கேட்டறிந்தனர். அதன்பிறகு, தமிழ்நாடு மாநில வாணிபக்கழக தலைமை அலுவகத்திற்கு சென்றனர். அங்கிருந்த தமிழ்நாடு மாநில வாணிபக்கழக இணை மேலாண்மை இயக்குனர் மோகன் மற்றும் உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இனி ஒடிசாவும் "தலை நிமிர்ந்து" நிற்கும்!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறம்பட நடந்து வருவதை அனேகமாக ஒடிசாவும் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழகத்தைப் போல மது விற்று அதன் மூலம் பெரும் வருவாய் ஈட்டும் மாநிலங்கள் வரிசையில் தமிழகத்தைப் போல இனி ஒடிசாவும் தலைநிமிர்ந்து நிற்கும் என்று எதிர்பார்க்கலாம்!