ரயில்களில் முண்டியடிக்கும் கூட்டம்... காத்தாடும் பேருந்து நிலையங்கள்: மக்கள் கடும் அவதி
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது.
Recommended Video
சென்னை: அமைச்சருடனான பேச்சுவார்த்தை பலனிக்காததால் போக்குவரத்து துறை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் மேற்கொண்டு உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
போக்குவரத்து துறை ஊழியர்கள் ஊதிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக பேச்சுவார்த்தை நேற்று போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் நடந்தது.
ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் நேற்றில் இருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர்.
குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள்
அதன்படி இன்று காலையில் முதற்கொண்டு தமிழகத்தில் எந்த அரசு பேருந்துகளும் ஓடவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப ஊழியர்களுக்கு அரசு அழைப்பு விடுத்தும், அதற்கு செவிசாய்க்காததால் அண்ணா தொழிற்சங்க ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டன. மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு சென்றவர்கள் மிகுந்த சிக்கலுக்கு ஆளாகினர்.
நீதிமன்றம் எச்சரிக்கை
போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்று வருவதைத் தொடர்ந்து இயக்கப்பட்ட ஒரு சில பேருந்துகளும் தாக்கப்பட்டதால், பேருந்து சேவை முற்றிலுமாக தடைப்பட்டது. 95% அதிகமான ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அரசு கோரிக்கைக்கு செவி சாய்க்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் ஊழியர்கள் அறிவித்து உள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க ஊழியர்களை பணிக்கு திரும்பமாறு சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
வீடு திரும்புவதில் சிக்கல்
சென்னையில் பேருந்துகள் இயங்கததால் புறநகர் மற்றும் பறக்கும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அனைத்து ரயில் நிலையங்களிலும் மக்கள் அதிக அளவு குவிந்து உள்ளனர். மேலும் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கமாக வார இறுதி நாட்களில் ஊருக்கு செல்பவர்களும் செய்வதறியாது திகைத்து உள்ளனர். வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்புவதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதுபோல வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வர திட்டமிட்டு இருந்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை
வழக்கமாக மாலை வேளைகளில் கூட்டமாக காணப்படும் பேருந்து நிலையங்கள் காற்று வாங்கிக்கொண்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களும் தங்களது கட்டணங்களை பெருமளவு உயர்த்தி உள்ளனர். இதனால் கடும் அவதிக்கு ஆளாகி உள்ள பொதுமக்கள் அரசு விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.