திவாகரன் கல்லூரியில் 3வது நாளாக சோதனை... வினாத்தாள்களையும் விட்டு வைக்கவில்லை!
மன்னார்குடியில் உள்ள திவாகரன் கல்லூரியில் 3வது நாளாக சோதனை நடந்து வரும் நிலையில் மாணவர்களின் வினாத்தாள்களையும் அதிகாரிகள் சோதித்தனர்.
மன்னார்குடி: மன்னார்குடி அருகே சுந்தரகோட்டையில் திவாகரனுக்கு சொந்தமான செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்ட வினாத்தாள்களையும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை முடிவுற்றுள்ள நிலையில், அவருக்கு சொந்தமான மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் உஉள்ள செங்கமலத்தாய் கல்லூரியில் மூன்றாவது நாளான வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
ஷிப்ட் முறையில் அதிகாரிகள் மாறி மாறி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
கேள்வித்தாளையும் ஆராய்ந்தனர்
இந்நிலையில் கல்லூரிக்கு தற்போது செமஸ்டர் தேர்வு காலம் என்பதால் இன்று காலையில் திருச்சி பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து செங்கமலத்தாயார் கல்லூரிக்கு வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கட்டுக் கட்டாக கொண்டு வரப்பட்ட அந்த சீலிடப்பட்ட வினாத்தாள்களை கல்லூரி வாசலிலேயே இறக்கி வைத்து அதிகாரிகள் ஒவ்வொரு கட்டாக பிரித்து சோதனை செய்தனர்.
பஸ்ஸை நிறுத்தி
வினாத்தாள் கொண்டு வந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஊழியர்களிடம் அடையாள அட்டையை பரிசோதித்த அதிகாரிகள் வினாத்தாள்களில் ஏதேனும் மறைத்து கொண்டுவரப்பட்டுள்ளதா என்றும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்கிறது சோதனை
திவாகரனின் பெரும்பாலான பணப்பரிவர்த்தனை இந்த கல்லூரியின் மூலம் நடந்திருப்பதாக வருமான வரித்துறையினர் சந்தேகிப்பதால் தொடர்ந்து அதிகாரிகள் வந்து சோதனை நடத்திய வண்ணம் உள்ளனர்.
கல்லூரி ஊழியர்களுக்கு சிக்கல்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மதிப்பிழந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் இந்தக் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்களின் வங்கிக் கணக்கு மூலம் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே இன்று விடுமுறை நாளாக இருந்தாலும் ஊழியர்கள் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.