வாசுவிடம் ரூ.20 லட்சம்.. கலர் கலராக.. கட்டுக் கட்டாக.. அத்தனையும் புது நோட்டு.. பதறி போன பரமக்குடி!
பரமக்குடி: கட்டு கட்டாக.. கலர் கலராக.. பணக்கட்டுகளை திமுகவினரிடம் இருந்து பறிமுதல் செய்திருக்கிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக கொண்டு போனபோதுதான் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் பரமக்குடி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே நாடு முழுவதும் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர் ராத்திரியும் பகலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் ஏராளமான பணத்தை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்களையும் விசாரித்து வருகிறார்கள். ஆனால் என்னதான் கண்கொத்தி பாம்பாக பார்த்தாலும் எப்படியாவது பணப்பட்டுவாடா இருந்து கொண்டுதான் இருக்கிறது.
திமுகவினர் 100 பேர் நள்ளிரவில் வீடு புகுந்து என்னை மிரட்டுனாங்க.. கரூர் கலெக்டர் புகார்
மும்முரம்
இந்நிலையில், பிரச்சாரத்துக்கு இன்றுதான் கடைசி நாள். அதனால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் அரசியல் கட்சியினர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படித்தான் பரமக்குடியில் இன்று காலை நயினார்கோவிலிருந்து பாண்டியூர் செல்லும் சாலையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.
டாடா சுமோ
அந்த பக்கமாக செல்லும் ஒரு வண்டியையும் விடாமல் சோதனை செய்தனர். அந்த நேரத்தில் ஒருடாடா - சுமோ வண்டி வேகமாக வந்தது. அதையும் நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்தவருக்கு குப்பென வியர்த்து விட்டது. இதனால் அதிகாரிகள் அவரிடம் யார் என்ன என்று விசாரித்தனர். அப்போது அந்நபர், திமுக ஒன்றிய முன்னாள் நிர்வாகி வாசு என்றும், வாணிய வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தயங்கி தயங்கி வாசு பதில் சொல்லவும் காரை சோதனை போட்டனர்.
கட்டு கட்டாய்..
அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக 500 ரூபாய் கட்டுக்கள் இருந்தன. மொத்தம் 19 லட்சத்து, 93 ஆயிரத்து, 500 அதாவது கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் மறைத்து வைத்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பணத்துக்கு எந்தவித ஆவணமும் வாசுவிடம் இல்லை. அதனால் டாடா சுமோ வண்டியையும், வாசுவையும் சேர்த்து பரமக்குடி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல்
பணப்பட்டுவாடா என்பது திமுகவில் என்று மட்டும் இல்லை. திமுக என்றால் வெறும் 500 ரூபாய்தான்.. ஆனால் அதிமுக 1000 ரூபாயை பட்டுவாடா செய்கிறதாம். அதற்கு சமமாக அமமுகவும் அள்ளி விடுகிறதாம். ஆனால் அதிமுக தரப்பில் யாரையும் மடக்கி, சோதனையோ,விசாரணையோ நடத்தப்படவில்லை என்று அப்பகுதி மக்களே குற்றஞ்சாட்டுகின்றனர்.