நெல்லை மாவட்ட தாதுமணல் குவாரிகளில் 2–வது நாளாக ஆய்வு
தாது மணல் முறைகேடு தொடர்பாக வருவாய்த்துறை ஆணையாளர் ககன்தீப் சிங் பெடி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் நெல்லையில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 15 குழுக்களைச் சேர்ந்த 128 அதிகாரிகள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
15 மாவட்டங்களைச் சேர்ந்த நில அளவைத்துறை உதவி இயக்குனர்கள், 75 களப்பணியாளர்கள் ஆய்வில் கலந்து கொண்டனர். முதல் நாள் 22 மணல் குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2-ம் நாளான நேற்று விடுபட்ட குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டது. குட்டம், கரைச்சுத்து உவரி, கரைச்சுத்து புதூர், லெவிஞ்சிபுரம், இருக்கன்துறை, செட்டிக்குளம், திருவம்பலாபுரம், கூடுதாழை உள்ளிட்ட 25 தாது மணல் குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும் கூந்தங்குழி, வித்யாபதி, தோமையாபுரம் ஆகிய இடங்களில் உள்ள மணல் குவாரிகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இன்றும் இந்த ஆய்வு தொடர்கிறது.