முதியவர்கள் கொலை விவகாரம்: மீண்டும் காஞ்சிபுரம் கருணை இல்லத்தில் கோட்டாச்சியர் தலைமையில் ஆய்வு
காஞ்சிபுரம்: பாலேஸ்வரத்தில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கருணை இல்லத்தில் முதியவர்களைக் கொன்று அவர்களின் எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக வந்துள்ள புகாரை அடுத்து கோட்டாச்சியர் தலைமையில் 10 அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் ஜோசப் கருணை இல்லத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் முதியவர்களைக் கொன்று அவர்களின் உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த முதியோர் இல்லத்தில் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் கடந்த மே மாதத்தில் இருந்து அந்த காப்பகம் உரிய ஆவணங்கள் இல்லாமல் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், முறையான விளக்கம் கேட்டு காப்பக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இதுகுறித்து காப்பக நிர்வாகத்திடம் இருந்து எந்த முறையான விளக்கமும் அளிக்கப்படவில்லை.
அங்குள்ள 320 முதியவர்களை வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாவட்ட கோட்டாச்சியர் ராஜூ தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட குழு காப்பகத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
இன்றைய விசாரணை முடிந்த பிறகு, இதுகுறித்து நடவடிக்கை குறித்து விரிவான விபரங்கள் தெரியவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.