அதிகாரிகள் எஸ்கேப்.. கூட்டத்தை ஒத்தி வைத்த விவசாயிகள்!
சமாதான கூட்டத்துக்கு வரவேண்டிய அதிகாரிகள் வராததால் கூட்டத்தை விவசாயிகள் ஒத்தி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: சமாதான கூட்டத்துக்கு வரவேண்டிய அதிகாரிகள் வராததால் கூட்டத்தை விவசாயிகள் ஒத்தி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிமுத்தாறு அணையில் இருந்து 3, 4வது ரீச்சுகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக நடக்கவிருந்த சமாதான கூட்டம், அதிகாரிகள் வராததால் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் கூட்டத்துக்கு வந்திருந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மணிமுத்தாறு அணையில் தற்போது 110 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதன்படி 1முதல் 4 ரீச் கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் 1மற்றும் 2 ரீச்சில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டது.
சாத்தான்குளம் பகுதி குளங்களுக்கு வந்து சேரும் வகையில் உள்ள 3, 4வது ரீச் குளங்களுக்கு தண்ணீரே வரவில்லை. ஏற்கனவே மழை பொய்த்துப் போய் இருந்த நிலையில், இவ்வாறு கிடைக்கப்பெறும் தண்ணீரை கொண்டு விவசாயத்தை காப்பாற்றலாம் என எண்ணியிருந்த விவசாயிகளுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
இதனால் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள், கலெக்டர் மற்றும் மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. இதையடுத்து மணிமுத்தாறு 3,4வது ரீச்சுகளுக்கு தண்ணீர் திறந்து குளங்களை நிரப்ப வலியுறுத்தியும், தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டித்தும் தாமிரபரணி வெள்ளநீர் வாய்க்கால் முதல் உரிமை பகுதி விவசாயிகள் சங்கம் சார்பில் சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் 12ம் தேதி இன்று சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அதிகாரிகள் சமாதான கூட்டம் போட்டு பிரச்சனையை தீர்க்கலாம் என்று கூறியதன் பேரில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அதிகாரிகள் டிமிக்கு கொடுத்ததால் கூட்டம் ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.