திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான பலகோடி மதிப்பிலான நிலம் மீட்பு- அதிகாரிகள் அதிரடி
திருச்செந்தூர்: நாகர்கோவில் பார்வதி புரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சுதீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்கள் நிர்வாகம் மற்றும் திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் குமரி மாவட்டத்தில் பல இடங்களில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களை மீட்க அதிகாரிகள் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை சுசீந்திரம் கோயில் நிர்வாகம் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.600 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேபி ரோட்டில் பார்வதிபுரம் அருகே திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் 55 சென்ட் நிலம் சாலையின் இரு பக்கமும் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் வீடுகள் மற்றும் 75க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டிருந்தன. இதை வரைமுறைப்படுத்தவும், அதற்கு வாடகை வசூலிக்கவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதற்கு யாரும் ஓத்துழைக்கவில்லை.
மேலும் அந்த நிலத்தில் ஓரு பகுதியை கம்பவுண்ட் சுவர் கட்டி அதை விற்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த கம்பவுண்ட் சுவரை உடைத்து அதில் இருந்த கட்டுமானங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து ஆக்கிமிரப்பு மீட்கப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.250 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
கோயில் நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் பதட்டம் உருவாகியுள்ளது.