கேரளாவிலிருந்து கோழிக்கழிவுகளுடன் 2 லாரிகள் தமிழக எல்லையில் மடக்கிப் பிடித்த மக்கள்!
செங்கோட்டை: கேரளாவிலிருந்து 2 லாரிகளில் கொண்டு வரப்பட்ட கோழிக்கழிவுகளை பொதுமக்கள் தமிழக எல்லைப் பகுதியில் மடக்கி பிடித்தனர்.
தமிழக கேரளா எல்லை பகுதியான செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவுக்கு தினமும் 1500க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் சென்றுவருகின்றன.
தமிழகத்திலிருந்து சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் திரும்பும் போது வெற்று வாகனங்களாக வரும். அப்படி வரும் வாகனங்கள் அங்கிருந்து பல்வேறு கழிவுகளை ஏற்றி தமிழகத்தின் எல்லைகளில் அவர்கள் கொண்டுவந்து கொட்டி சென்றவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில் அங்குள்ளவர்கள் கழிவுகளை தமிழகத்தை நோக்கி அள்ளி அனுப்பும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதற்க்கு நமது தமிழக வாகன ஓட்டுனர்களும் உடந்தையாக இருந்து வருகின்றனர்.
நேற்று நள்ளிரவில் கேரளாவிலிருந்து தமிழகம் நோக்கி இரண்டு சரக்கு லாரிகள் வேகமாக வந்தன. அதனை புளியரை எல்லையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு அதிகாரிகள் குழுவினர் மற்றும் புளியரை பொதுநல அமைப்பினர் ஆகியோர் மறித்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த லாரிகளில், இருந்த கழிவுகளில் இருந்து புழுக்கள் சாலையில் கொட்டுமளவுக்கு இருந்ததைக் கண்ட அதிகாரிகள், புளியரை பொதுநல அமைப்பினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த புளியரை போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் பவுன்.மற்றும் போலீசார் லாரியை பிடித்து உடனடியாக கேரள எல்லையில் கொண்டு சென்று விட்டு விட்டு வந்தனர்.
இந்த சம்பவம் எல்லைப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக் கழிவுகளை மடக்கிப் பிடித்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நலக் குழுவினரை, மாவட்ட நிர்வாகம் பாராட்டியுள்ளது.