புயல் போல செயல்பட்ட அரசு அதிகாரிகள்.. மழை வெள்ளம் கிராமத்துக்குள் புகாமல் தடுப்பு
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே பெய்து வரும் கன மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகளின் துரித செயலால் அது தடுக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரம் பகுதியான செங்கோட்டை தாலுகா மேக்கரையில் உள்ள அடவிநயினார் கோவில் நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கால்வாய்களில் வெள்ளம் ஏற்ப்பட்டது. காட்டாற்று வெள்ளம் காரணமாக வடகரை மேட்டுக் கால் பகுதி கால்வாயிலும் வெள்ளம் ஏற்ப்பட்டது. இதன் காரணமாக வடகரை கிராமத்தில் உள்ள ரகுமானிய புறம் பகுதிகளுக்குள் புகும் அபாயம் உருவானது. தாழ்வான சில வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இது குறித்து தகவல் அறிந்த செங்கோட்டை தாசில்தார் சங்கரலிங்கம் ,வடகரை ஊராட்சி மன்றத்தலைவர் செரிப் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள், பொதுமக்கள் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கினர். அதிகாலை 12.30மணிமணிக்கு மேட்டுக்கால் கால்வாயில் இருந்த அடைப்பு ஜேசிபி இயந்திரம் மூலம் நீண்ட போராட்டத்திற்குப் பின் பின் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகாமல் அக் குடியிருப்பு பகுதி தப்பியது.
தமிழக கேரள எல்லையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
இதற்கிடையே, தமிழக கேரளா எல்லையில், நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரம் பகுதியான கொல்லம் --திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை செங்கோட்டை தாலுகா புளியரை கிராமம் கோட்டைவாசல் மலைச்சாலை பகுதியில் சாலையின் குறுக்கே பழமை வாய்ந்த புளியமரம் ஓன்று சாலையின் குறுக்கே சாய்ந்தது.
இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களும் சாலையின் ஓரத்தில் அணிவகுத்து நின்றன.
இதன் காரணமாக பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.