குற்றால அருவிகளில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் உபயோகிக்க தடை: மீறினால் ரூ.100 பைன்
குற்றாலம்: குற்றால அருவியில் சோப்பு, சிகைக்காய், ஷாம்பு,எண்ணெய் உபயோகித்து குளிப்பவர்களிடம் 100 ரூபாய் அபராதம் வசூலிக்க குற்றாலம் பேருராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அருவிகளில் குளிப்பவர்களை கண்காணிக்க இரவில் ஒருவரும், பகலில் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் யாருக்கு லாபம் வரப்போகிறது என்பது இயற்கை ஆர்வலர்களின் கேள்வியாகும்.
ஏழைகளில் ஸ்பா என்றழைக்கப்படும் குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை சீசன் காலங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் படையெடுப்பார்கள். வடகிழக்கு பருவமழை காலத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் குற்றாலத்தில் குவியும்.
மூலிகை அருவிகள்
அருவிநகரம் என்று போற்றப்படும் குற்றாலத்தில் நோய் தீர்க்கும் அருவிகள் உள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி 7மலைகளை கடந்து அங்குள்ள மூலிகைகளில் படர்ந்து நோய் தீர்க்கும் அரிய நீராக மாறி புனிதத்துவம் வாய்ந்ததாக போற்றப்படும் சித்ரா நதி குற்றால அருவியாய் கொட்டுகிறது. லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகளின் தேக நோயும்,மேக நோயும் போக்கி உடலுக்கும், உள்ளத்திற்கும் உற்சாகத்தை அள்ளித்தரும் அருவியாய் இந்த அருவிகள் விளங்குகின்றன.
அருவிகள் நிரம்பிய பகுதி குற்றாலம்.
இந்தியாவிலேயே அருவிகள் நிரம்பப்பெற்ற ஒரே பகுதி என்றால் தமிழகத்தில் உள்ள குற்றாலம் மட்டுமே. ஐந்தருவி, செண்பக தேவிஅருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, தேனருவி, சிற்றருவி என 7 அருவிகள் ஒருசேர அமையப்பெற்ற குற்றாலம் புராணங்களில் புனிதம் நிறைந்த பகுதியாக போற்றப்படுகிறது.
மருத்துவ குணம்
இங்கு உற்பத்தியாகி கொட்டும் நீர் புனிதம் நிறைந்ததாகவும் அதனால் இந்த அருவியில் குளித்தால் மருத்துவக்குணம் நீரில் உள்ளது. பல்வேறு சிறப்புக்கள் வாய்ந்த குற்றாலத்தில் கடந்த சில வருட காலமாக குளிக்க வருபவர்கள் அருவி நீரை மாசுபடுத்தும் வண்ணம் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் குளியல் நடத்துவதால் அருவி தண்ணீர் மாசுபடுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
உயர்நீதிமன்றம் உத்தரவு
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு எதிரொலியாக குற்றால அருவியை பாதுகாக்கவும், சுற்றுலா பயணிகளின் அடிப்படை தேவையை மேம்படுத்தும் வகையிலும் 37 நிபந்தனைகளை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
எண்ணைய் குளியலுக்குத் தடை
இதன் எதிரொலியாக குற்றாலத்தில் கடந்த சிலமாதங்களுக்கு முன் அருவியில் எண்ணை குளியல், தடாகத்தில் துணி துவைத்து, சோப்பு, ஷாம்பு பயன்படுத்துதல், மது குடித்து குளிக்க வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து தடை விதித்தனர்.
கடைகளில் விற்பனை அவுட்
இதையடுத்து அருவிக்கரை பகுதியில் உள்ள கடைகளில் சோப்பு, ஷாம்பு, சீயக்காய் போன்றவை முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டன. ஆயில் மசாஜ் காலி ஆயில் மசாஜ் கடைகள் திறக்கப்படவில்லை. அருவி தடாகத்தில் துணி துவைக்க வந்தோரை போலீசார் திருப்பி அனுப்பினர். தடாகத்தின் 4 புறங்களிலும் கயிறு கட்டி தடை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு இருந்ததை காணமுடிந்தது.
ரூ.100 அபராதம்
இந்நிலையில் முதற்கட்ட சீசன் முடிந்து இரண்டாம் கட்ட சீசனான ஐயப்ப சீசன் தொடங்கியுள்ளது. இரவும்,பகலும் அருவிக்கரைகளில் சரண கோஷம் முழங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அலைமோதும் ஐய்யப்ப பக்தர்கள் அருவிக்கரை பகுதியிலும் சரி, அருவிக்குள்ளும் சரி, சோப்பு, ஷாம்பு போட்டு குளித்து நீதிமன்ற உத்தரவினை புறந்தள்ளி வந்த நிலையில் குற்றாலம் பேருராட்சி நிர்வாகம் நேற்று இரவுமுதல் நீதிமன்ற உத்தரவை அமல் படுத்தும் விதமாக குற்றால அருவியில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் உபயோகித்து குளித்தால் 100 ரூபாய் அபராதம் என்றும் இதை கண்காணித்து அபதாரம் வசூல் செய்யும் பணியில் பணியில் இரவில் ஒருவர், பகலில் இருவரை நியமனம் செய்து அவர்களை அங்கேயே நிறுத்தியும் வைத்துள்ளது.
அபராதம் போடுவதால் யாருக்கு லாபம்
குற்றாலம் பேருராட்சி நிர்வாகத்தின் காலம் கடந்த இந்த அதிரடி நடவடிக்கை வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அபராதம் போடுவதால் ஒருசிலர்தான் லாபம் அடையக்கூடும். இது சுற்றுலா பயணிகளின் வருகையை குறைத்துவிடும் எனவே சுற்றுலாபயணிகளுக்கு நீரை மாசுபடுத்தக்கூடாது என்ற எண்ணம் உருவாகவேண்டும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.