எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்கள் மோதல்... கடலில் எண்ணெய் பரவியதால் மீனவர்கள் கடும் பாதிப்பு
எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதில் கப்பல் சேதமடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் கலந்தது.கடலோர பகுதிகளில் பரவி இருக்கும் எண்ணெய் படலத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
சென்னை: சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக்கொண்டன. இதனால் கடலில் கலந்த கச்சா எண்ணெய் கழிவு எண்ணூரில் இருந்து திருவான்மியூர் வரை பரவியுள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் செத்துபோகும் அபாயம் ஏற்ப்பாட்டுள்ளதாகவும், கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவே மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த 28ம் தேதி இங்கிருந்த புறப்பட்ட காலியான கப்பலும் மும்பையில் இருந்து எண்ணெய் ஏற்றிவந்த கப்பலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் இருந்த பல்லாயிரம் லிட்டர் எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது. அதில் இருந்த பணியாளர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
உடைந்த கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெய் கடல் நீரில் ஒரு அடி உயரத்திற்கு திட்டாக படர்ந்துள்ளதை பிரித்து எடுக்கும் பணியில் கடலோர காவல் படையினர் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்களும் ஈடுபட்டுள்ளனர்.
கடல் நீரில் இருந்து எண்ணையை பிரித்தெடுக்கும் நவீன இயந்திரம் சென்னை துறைமுகத்தில் இல்லாததால் பணியாளர்களே நேரடியாக எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். கழிவு எண்னெயை பிரித்து எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் எண்ணெய் படலம் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவியுள்ளது.
மேலும் கடற்கரை ஓரங்களிலும் மணல் திட்டுக்களிலும் எண்ணெய் படலம் அதிகளவில் ஒதுங்கியுள்ளதால் கடல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது. கடலில் வாழும் அரியவகை உயிரினங்கள் மட்டுமின்றி மீன்களும் இறக்கும் அபாயம் ஏற்ப்பாட்டுள்ளது. மேலும் சென்னைக் கடலில் பிடிக்கும் மீன்கள் மூலம் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்ப்டுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மீனவர்கள் இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஒரு சில இடங்களில் பிடித்து வரப்படும் மீன்களையும் பொதுமக்கள் வாங்க தயங்குவதால் தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து மீன்களை காப்பாற்றவும், கழிவுகளை நவீன இயந்திரங்கள் மூலம் அகற்றவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.