எண்ணூர் கடலை களங்கம் செய்த 'டான் காஞ்சிபுரம்' கப்பல் சிங்கப்பூர் புறப்பட்டது!
சென்னை எண்ணூர் கடல் பகுதியில் கச்சா எண்ணெயை கொடி களங்கம் செய்த டான் காஞ்சீபுரம் கப்பல் நீதிமன்ற உத்தரவையடுத்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.
சென்னை : சென்னை எண்ணூர் கடல் பகுதியில் விபத்தின் போது கச்சா எண்ணெய் கடலில் கொட்டி களங்கம் செய்த கப்பல் டான் காஞ்சீபுரம் 10 மாத சட்ட போராட்டத்திற்குப் பிறகு சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளது.
சென்னை எண்ணூர் கடல் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் சரக்கு கப்பலும், கச்சா எண்ணெய் கப்பலும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டான் காஞ்சீபுரம் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கசிந்தது.
குறைவான அளவே கச்சா எண்ணெய் கொட்டியதாக கருதப்பட்டது. ஆனால் கடலில் தாரை உருக்கி ஊற்றியது போல எண்ணூர் கடல் பகுதி எண்ணெய் படர்ந்து கருப்பாக காட்சியளித்தது.
ஒரு மாத நீண்ட அகற்றும் பணி
இந்த கச்சா எண்ணெயை அகற்றுவது மிகப்பெரிய சவலாக அமைந்தது. சுமார் ஒரு மாத போராட்டத்திற்குப் பிறகு தான் கச்சா எண்ணெய் அகற்றப்பட்டது. தன்னார்வலர்களை வைத்து வாலிகளைக் கொண்டு கச்சா எண்ணெய் அகற்றப்பட்டது கெடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
மீன்வளம் பாதிப்பு
கச்சா எண்ணெய் அகற்றப்பட்டாலும் ஓராண்டுக்கு அதன் தாக்கம் இருக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் அந்தப் பகுதியில் மீன் உற்பத்தி பாதித்தது. எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதியளித்தது.
கப்பலுக்கு எதிராக வழக்கு
இதனிடையே டான் காஞ்சிபுரம் கப்பல் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மீனவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்காமல் கப்பலை கொண்டு செல்லக் கூடாது என்று மீனவர் அமைப்பினர் வலியுறுத்தினர்.
நீதிமன்ற அனுமதியுடன் புறப்பட்டது
இந்நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் டான் காஞ்சீபுரம் கப்பல் சிங்கப்பூர் புறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் 10 மாதங்களாக எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் இன்று தனது பயணத்தை தொடங்கியுள்ளது.