மெட்ரோ ரயில் சுரங்கத்தில் திடீர் எண்ணெய் கசிவு… அண்ணா சாலையில் பரபரப்பு
சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு சுரங்கம் தோண்டும் போது எண்ணெய் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஆயிரம் விளக்கு மற்றும் தேனாம்பேட்டை டிஎம்எஸ் இடையே சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் வழியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் ஒரு மார்க்கமாகவும், சென்ட்ரலில் இருந்து எழும்பூர், திருமங்கலம், கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக விமான நிலையம் வரையில் மற்றொரு மார்க்கமாகவும் நடைபெற்று வருகிறது.
அண்ணாசாலையில் சைதாப்பேட்டை முதல் சென்ட்ரல் வரையிலான 7.3 கி.மீ. தூர சுரங்கப்பாதை பணிகள் இரு பகுதியாக நடைபெற்று வருகின்றது. இதுதான் கடைசி சுரங்கப் பாதை பணிஆகும். தற்போது ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்து டிஎம்எஸ் வரை எந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளின் போது திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுரங்கம் தோண்டும் பணியில் இருந்த ஊழியர்கள் அச்சமடைந்தனர். உடனடியாக பணிகளை நிறுத்திவிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவலைத் தெரிவித்தனர்.
சுரங்கம் தோண்டும் இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் எண்ணெய் கசிவு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அண்ணா சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.