கொட்டிய ஆயிலை அகற்றுவது 2வது வேலைதான்.. துறைமுக தலைவர் பாஸ்கர் ஆச்சாரின் அலட்சியம்
கப்பல்கள் மோதிக்கொண்டதும் கப்பலில் உள்ளவர்களை காப்பற்றும் நோக்கத்தில் இருந்தோம் என்றும், கொட்டிய ஆயிலை அகற்றுவது இரண்டாவது வேலை என்றும் எண்ணூர் துறைமுக தலைவர் பாஸ்கர் ஆச்சார் கூறியுள்ளார்.
சென்னை: இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொடர்ந்து எண்ணெய் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் கப்பலில் உள்ளவர்களை காப்பாற்றும் பணியில் முதலில் இருந்தோம் என்று எண்ணூர் துறைமுக தலைவர் பாஸ்கர் ஆச்சார் தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகம் தொடங்கப்பட்டு 139 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு கப்பல்கள் மோதி டன் கணக்கில் கச்சா எண்ணெய் கடலில் கொட்டி இருப்பது இதுதான் முதல் முறை. இந்த எண்ணெய் அகற்றும் பணியை 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. என்றாலும் இன்னும் முடிந்தபாடில்லை. வெறும் கைகளாலும், வாளிகளாலுமே எண்ணெய் அகற்றப்படுவதால் இன்னும் அதிக நாட்கள் எடுக்கும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல்கள் மோதிக்கொண்டதற்கு உண்மையான காரணம் என்னவென்று துறைமுக தலைவரிடம் விசாரித்தால் பதில் ஒன்றும் இல்லை. மாறாக கப்பல் விபத்தில் மனிதர்களுக்கு எந்த ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதில்தான் கவனம் செலுத்தினோம் என்றும், எண்ணெய் கொட்டியதை அகற்றுவது இரண்டாவது வேலைதான் என்றும் பாஸ்கர் ஆச்சார் கூறினார்.
பொதுவாக துறைமுகத்துக்கு ஒரு கப்பல் வருகிறதென்றால், 10 கடல் மைல் தூரத்திற்கு லோக்கல் கேப்டன் சென்று அந்த கப்பலை அழைத்து வருவார். அதே போன்று துறைமுகத்தில் இருந்து வெளியே சென்றாலும், லோக்கல் கேப்டன் அழைத்துச் சென்று விட்டுவிட்டு வருவார். இதுதான் நடைமுறை.
ஆனால், ஜனவரி 28ஆம் தேதி எண்ணூர் துறைமுகத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இரண்டு கப்பல்கள் மோதி டன் கணக்கில் எண்ணெய் கொட்டி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பு கூறுவது என்பது தெரியவில்லை என்று அங்கு பணி புரியும் பெயர் சொல்ல விரும்பாதவர்கள் தெரிவித்துள்ளனர்.