எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை கடலில் பரவிய எண்ணெய் படலம்... மீனவர்கள் அதிர்ச்சி
எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல்கள் விபத்துக்குள்ளானதில் இருந்து வெளியேறிய எண்ணெய் கசிவு திருவான்மியூர் வரை பரவியுள்ளது. இதனால் மீனவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: கடலில் கலந்த கச்சா எண்ணெய் கசிவு எண்ணூரில் இருந்து திருவான்மியூர் வரை பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த 28ம் தேதி இங்கிருந்த புறப்பட்ட காலியான கப்பலும் மும்பையில் இருந்து வந்த எண்ணெய் கப்பலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எண்ணெய் கப்பலில் இருந்த பல்லாயிரம் லிட்டம் எண்ணெய் கசிந்தது.
ஓரு அடி உயரத்திற்கு திட்டாக படர்ந்துள்ள எண்ணெய்யை பிரித்து எடுக்கும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். பொருத்தமான எந்திரம் இல்லாததால் பணியாளர்களே நேரடியாக எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்துகின்றனர்.
ஆனால் இதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் எண்ணெய் படலம் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவியுள்ளது. கடற்கரை ஓரங்களிலும் எண்ணெய் படலம் அதிகளவில் ஒதுங்கியுள்ளதால் கடல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மீனவர்கள் இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஒரு சில இடங்களில் பிடித்து வரப்படும் மீன்களையும் மக்கள்க வாங்க தயங்குவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவத்துள்ளனர்.