சென்னையில் ஐடி நிறுவன பெண் ஊழியரை கடத்த முயற்சி- ஓலா டாக்சி டிரைவர் கைது
சென்னையில் பெண்ணை காரில் கடத்த முயன்ற ஓலா டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சயந்தி மித்ரா, 26, பெருங்குடியில் தங்கி, தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஞாயிறன்று காலை, சயந்தி மித்ரா, அவரது நண்பர் சுமன் சக்ரவர்த்தி ஆகிய இருவரும், சென்னை விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி செல்ல, ஒலா கால் டாக்சியை புக் செய்தனர். நண்பரை கீழே இறக்கி விட்டு சயந்தி மித்ராவை கடத்த முயற்சி செய்தான். சுமன் சக்ரவர்த்தி போலீசில் புகார் அளித்ததை அடுத்து கார் டிரைவரை கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து பெருங்குடிக்கு பல்லாவரம்- துரைப்பாக்கம் சாலையில், பயணித்த கார் திடீரென நின்றது. காரில் பழுது ஏற்பட்டு விட்டதாக கூறிய டிரைவர், சுமன் சக்ரவர்த்தியை கீழே இறங்கி பார்க்க சொல்லியுள்ளார். டிரைவருக்கு உதவுவதற்காக சுமன் இறங்கியதையடுத்து, காரை வேகமாக ஓட்டினார். நடந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சயந்த் மித்ரா போலீசில் புகார் அளித்தார்.
டிரைவரின் செயலை பார்த்து, எனக்கு அதிர்ச்சி ஏற்படவே, காரில் இருந்து குதிக்க முயன்றேன். அப்போது டிரைவர் முத்துவேல், என் உடையை பிடித்து, காருக்குள் தள்ளினான். வேல்ஸ் பல்கலைக்கழக சாலை சந்திப்பு அருகே, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்லும் அவசரத்தில், கார் விபத்தில் சிக்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து டிரைவரை கைது செய்தனர் என்று சயந்தி மித்ரா கூறியுள்ளார்.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் முத்துவேல், 28, சயந்தி மித்ராவை கடத்தி செல்ல முயன்றது ஏன் என்று போலீசார் விசாரணை செய்தனர். அப்போது தான் பெண்ணை கடத்த முயற்சி செய்யவில்லை என்று கூறினார் முத்துவேல். இதனிடையே சயந்தி மித்ரா அளித்த புகாரின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காயமடைந்த சயந்தி மித்ரா, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் கிழக்குக் கடற்கரை சாலையில் ஒலா டாக்சியில் ஏறிய பெண் டாக்டரை டிரைவர் தனது நண்பர்களுடன் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.