மதுரை அருகே கோயில் கிணற்றில் வீசப்பட்ட ரூ2.49 லட்சம் பழைய 500 ரூபாய் நோட்டுகள்
மதுரை அருகே கோயில் கிணற்றில் இருந்து ரூ2.49 லட்சம் மதிப்புள்ள பழைய 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மதுரை: மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் உள்ள கோயில் கிணற்றில் இருந்து பழைய 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி புழக்கத்திலிருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தார். மேலும் நவம்பர் 10ம் தேதி முதல், வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 31ம் தேதி வரை செலுத்தலாம் என்ற வாய்ப்பையும் அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மிகுந்த சிரமத்திற்கு இடையே வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இருப்பினும் வாய்ப்பை தவறவிட்டவர்கள் ஆர்பிஐ கிளை அலுவலகங்களில் மார்ச் 31ம் தேதி வரை உரிய காரணத்தை கூறி மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு இந்திய குடிமகன்களுக்கு இல்லை எனவும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே பொறுந்தும் என கூறப்பட்டது. இதனால் மக்கள் குழப்பத்திற்கு ஆளாகினர்.
இதனிடையே பணத்தை வங்கிகளில் மாற்ற முடியாமலும், கைகளில் வைத்திருக்கவும் முடியாத சிலர் ஆங்காங்கே வீசி வரும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில் மதுரை, மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இந்த கிராமத்தில் உள்ள திருமறைநாதர் சிவன் கோயில் கிணற்றில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் கிடப்பதாக கோயில் நிர்வாகி மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பு ரூ2.49 லட்சம் ஆகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.