அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் பலி.. நெய்வேலியில் பரபரப்பு
நெய்வேலி அருகே அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெய்வேலி: நெய்வேலி அருகே அமைச்சர் எம்.சி.சம்பத்தின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நெய்வேலி வழியாக விருத்தாசலத்திற்கு சென்று கொண்டிருந்தார். நெய்வேலியில் என்.எல்.சி மருத்துவமனை அருகே அமைச்சரின் வாகனம் சென்று கொண்டிருந்தது.
அப்பபோது பின்னால் வந்த அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து அந்த முதியவர் என்எல்சி பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கடலூர் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
விசாரணையில் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி உயிரிழந்த முதியவர் செடுத்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்த 58 வயதான தங்கராசு என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நெய்வேலி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.