அரசு உதவித்தொகை பெற அல்லாடும் முதியோர்கள்!
நெல்லை: தமிழக அரசின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவி தொகை பலருக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் பயனாளிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சமூக பாதுகாப்பு திட்டத்தின் உழைக்கும் திறனற்ற விதவைகள், 45 வயதை கடந்த திருமணம் ஆகாத முதிர் கன்னிகள், 8 ஆண்டுகளுக்கு மேல் கணவரால் கைவிடப்பட்டோருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
அதுபோல் 60 வயதை கடந்த பிள்ளைகளால் கைவிடப்பட்டமுதியோர்களுக்கும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை உழைக்கும் திறன் உள்ளவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் வழங்கப்படுவதாக புகார் எழுந்ததால் அதனை ஆய்வு செய்த அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து வருவாய் உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் கிராம நிர்வாக அலுவலர் மூலம் மறு ஆய்வு செய்யப்பட்டு பலருக்கு உதவி தொகை ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னரும் உதவி தொகை கிடைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. 2 மாதத்திற்கும் மேலாக முதியோர்களுக்கு உதவி கிடைக்காததால் அவர்கள் விரக்தியில் உள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இதுகுறித்த புகார்கள் அதிக அளவில் கலெக்டர் அலுவலகம் வருவதால் அவர்கள் திகைப்பில் உள்ளனர்.
மாநில அரசு ஏற்கனவே ரேசன் பொருட்களின் அளவை குறைந்து விட்டதால் உதவி தொகை வழங்குவதில் சிரமம் உள்ளதாக சில வருவாய் அலுவலர்கள் கூறுகின்றனர்.
ஆனால் ஆதரவற்ற முதியோர்கள், மாற்று திறனாளிகள் 1 மாதம் வரை செலவினத்திற்காக படும் கஷ்டத்தை பார்த்தால் அரசு அதிகாரிகள் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.
பெரும்பாலானோர் அரசு வழங்கும் இலவச அரிசியை வாங்கி கஞ்சிகாய்ச்சி குடித்து விட்டு காலத்தை கழித்து வருகின்றனர் என சமூக ஆர்வலர் ஒருவர் வேதனையில் தெரிவித்தார்.