ரூபாய் தட்டுப்பாட்டால் இப்படியும் ஒரு அவலம்.. மூக்கில் துணி கட்டியபடி பணியாற்றும் வங்கி ஊழியர்கள்
ரிசர்வ் வங்கி நெடுங்காலமாக பயன்படுத்தாமல் இருந்த பழைய கசங்கிப்போன, அழுக்கு படிந்த 100, 50 ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட்டுள்ளது. இதனால் அந்த நோட்டுக்களிலிருந்து வாடை வீசுகிறது.
சென்னை: புதிய ரூபாய் நோட்டுக்கள் சப்ளை இல்லாத காரணத்தால், தேக்கி வைக்கப்பட்ட, மிகவும் பழைய தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து வரும், வாடையை ஏசி ரூமில் அமர்ந்து தாக்குப்பிடிக்க முடியாமல் தவிக்கிறார்கள் வங்கி ஊழியர்கள்.
பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை போதிய அளவில் அச்சிடவில்லை என்பதால், பணப் புழக்கம் குறைந்துள்ளது. இதை சமாளிக்க வங்கிகளில் அதிக அளவு ரூ.100 மற்றும் ரூ.50 நோட்டுகள் வினியோகிக்கபடுகிறது. இந்த நோட்டுகளிலும் பல வீடுகளிலேயே முடங்கி, வெளியே வருவதில்லை என்பதால், சில்லரை தட்டுப்பாட்டை சமாளிக்க இருப்பில் உள்ள ரூ.100, 50, 20 நோட்டுகளை வினியோகித்து வருகின்றன வங்கிகள்.
குறிப்பாக, ரிசர்வ் வங்கி நெடுங்காலமாக பயன்படுத்தாமல் இருந்த பழைய கசங்கிப்போன, அழுக்கு படிந்த 100, 50 ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில்விட்டுள்ளது. பயன்படுத்த தகுதியற்றது என்று ஒதுக்கி வைக்கப்பட்ட கோடி கணக்கான மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கிகளுக்கு புழக்கத்திற்கு வந்துள்ளன. இதனால் அந்த நோட்டுக்களிலிருந்து வாடை வீசுகிறது.
ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு வேலை பார்க்கும் வங்கி ஊழியர்களால், இதை சமாளிக்க முடியவில்லை. வாடை வங்கிக்குள்ளேயே சுற்றி வருகிறது. மேலும், ஒரு நோட்டோடு மற்றொன்று ஒட்டிக் கொண்டு இருப்பதால் பணம் எண்ணும் இயந்திரங்களால் அவற்றை சரிவர எண்ண முடியவில்லை.
பழைய பழைய நோட்டுகள் மூலம் வெளிவரும் தூசுகள் காற்றில் கலந்து வங்கி ஊழியர்களுக்கு இருமல், தும்மல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பணம் எண்ணுவோர் மட்டுமின்றி அனைத்து ஊழியர்களுமே முகத்தில் முகத்திரை அணிந்தபடியே வேலை பார்க்கிறார்கள். ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச கோளாறு பிரச்சினைகள் உள்ளோர் இதனால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.