சென்னையில் ஹைகோர்ட் வழக்கறிஞர் காரில் இருந்து ரூ.2 கோடி பழைய ரூபாய் நோட்டு பறிமுதல்
சென்னை சூளைமேட்டில உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாலை சிவக்குமாரிடம் ரூ.2 கோடி மதிப்புள்ள பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாலை சிவக்குமாரின் காரில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
பழைய நோட்டுக்களை வங்கியில் செலுத்தி மாற்றி கொள்ள காலக்கெடுவும் வழங்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தனர். தற்போது தான் மக்கள் பட்ட இன்னல்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டு சாலை சிவக்குமார் என்பவர் சூளைமேட்டில் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, போலீசார் உதவியுடன் அவரை மடக்கி பிடித்த வருமான வரித்துறையினர் காரை சோதனை செய்ததில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் சாலை சிவக்குமார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எனத் தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்தபின் அவரை சூளைமேடு போலீசாரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.