கிருஷ்ணகிரி அருகே மாடுகளைத் தாக்க வந்த சிறுத்தையை வெட்டிக் கொன்ற விவசாயி
கிருஷ்ணகிரி அருகே தனது மாடுகளைத் தாக்க வந்த சிறுத்தையை விவசாயி ஒருவர் வெட்டிக்கொன்றுள்ளார்.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே தான் வளர்த்து வந்த மாடுகளைத் தாக்க வந்த சிறுத்தையை விவசாயி ஒருவர் வெட்டிக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே மகாராஜகடை கிராமத்தில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. 62 வயதான அவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 8 கறவை மாடுகள் வளர்த்து வருகிறார்.
இப்பகுதியில் காட்டுவிலங்குகள் நடமாட்டம் அதிகம். இதனால் அப்பகுதி மக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு பாதுகாப்பாய் காவல் இருப்பது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் விவசாயி ராமமூர்த்தி, தனது மாடுகளிடத்தில் பால் கறப்பதற்காக வந்துள்ளார். அப்போது, காட்டுப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்றை மாடுகளை தாக்க வந்தது.
இதனைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி, சிறுத்தையை விரட்ட முயற்சி செய்துள்ளார். ஆனால், சிறுத்தை ராமமூர்த்தியை தாக்க வந்துள்ளது. இதனால், தோட்டத்தில் இருந்த அரிவாளை எடுத்து, புலியை தாக்கி உள்ளார் ராமமூர்த்தி.
இதனால் வெட்டுப்பட்ட சிறுத்தை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்தத் தகவலை அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.