மக்கிப் போன மனிதநேயம்... யாருக்குமே இப்படி ஒரு நிலைமை வந்துவிட கூடாது
மூதாட்டியின் சடலம் குப்பை வண்டியில் கொண்டு செல்லப்பட்டது.
தஞ்சை: ஈவு, இரக்கமற்ற, மனிதநேயமற்ற, மனசாட்சியற்ற, பச்சாதாபமற்ற செயல்களின் உச்சமே இந்த சம்பவம்.
தஞ்சை கல்லணை ஆற்றுப்பாலம் அருகே ஒரு பாட்டி நீண்ட நாட்களாகவே வசித்து வந்தார். இவருக்கு சொந்த பந்தங்கள் யாரும் இல்லை என தெரிகிறது. அதனால் எப்பவும் இந்த சாலையிலேயே கிடந்து காலத்தை ஓட்டி உள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நிலையும் சரி இல்லாமல் இருந்திருக்கிறது. பிறகு பாட்டி சுருண்டு அங்கேயே விழுந்து கிடக்கிறார்.
[அவர் ஒன்றும் பிரதமர் அல்ல.. வெறும் பியூன்தான்.. பொசுக்குனு இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களே சாமி!]
விரைந்து வந்த போலீசார்
உடல் அசைவற்று கிடந்தது. அந்த வழியாக போவோர் வருவோர் பாட்டியை பார்த்துகொண்டே நகர்கின்றனர். மேலும் அந்தப் பக்கம் திரும்பக்கூட இல்லை. ஒரு சிலர் உடனடியாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் பாட்டி உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர். ஆனால் அவர் யார், என்ன என்ற விவரம் எதுவுமே தெரியவில்லை.
மாநகராட்சிக்கு தகவல்
பின்னர் பாட்டி உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வண்டியை உடனே அனுப்பும்படி மாநகராட்சியை கேட்டனர். மாநகராட்சியோ ஒரு வண்டி கூட இல்லை என்று சொல்லிவிட்டனர். இருந்தாலும் அனுப்புகிறோம் என்றதும் போலீசார் காத்திருந்தனர். வண்டியும் வந்து நின்றது. ஆனால் அமரர் ஊர்தியோ, ஆம்புலன்ஸோ கிடையாது.
குப்பை வண்டி
அது ஒரு குப்பை அள்ளும் வாகனம். இதைத்தான் அனுப்பி வைத்தது மாநகராட்சி. அந்த வண்டியில் மாநகராட்சி ஊழியர்கள் பாட்டியின் உடலை ஒரு துணியால் சுற்றி அந்த குப்பை வண்டியில் அள்ளி தூக்கி போட்டு கொண்டு சென்று ராஜகோரி சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து இன்று நாடெங்கும் வைரலாகி வருகிறது.
டிஜிட்டல் இந்தியா?
வள்ளலாரும், புத்தரும் பிறந்த இந்த மண்ணில்தான் மனித உரிமை மீறல் அதிகமாக நடந்து வருகிறது. இப்படிப்பட்ட மீறல்கள் ஏற்கனவே நிறைய நடந்து, அவை இன்னும் ஆணையத்தின் நிலுவையில் உள்ள வழக்காகவே போய்க் கொண்டிருக்கிறது. ஒரு குப்பை வண்டியில் இறந்த மூதாட்டியின் உடலை தூக்கி போட்டு எடுத்து செல்லும் நிலைமைக்கு மனிதநேயம் மக்கி போய்விட்டதா? அல்லது டிஜிட்டல் இந்தியா எக்கச்சக்கமாய் வளர்ந்துபோய் விட்டதா?