6 பவுன் நகைக்காக மூதாட்டியை கொன்ற கொள்ளையர்கள்... ஈரோட்டில் அதிர்ச்சி
ஈரோடு அருகே 6 பவுன் நகைக்காக மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: ஈரோடு அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்த 6 பவுன் நகைக்காக மூதாட்டியை கொள்ளையர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடித்த கரட்டாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலட்சுமி. இவருடைய 2 மகன்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
78 வயதான ராம லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் ராமலட்சுமி வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது ராமலட்சுமி தலையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ராமலட்சுமி அணிந்திருந்த 6 பவுன் சங்கிலி மாயமாகியுள்ளதால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராமலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் தான் ஊர் அடங்கிய பிறகு இரவு நேரத்தில் அவரை கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். 6 பவுன் நகைக்காக மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.