"பஸ்ஸை எடுத்தே...கண்ணாடியை உடைச்சிடுவேன்"- ஆம்பூரில் கெத்து காட்டிய 'தேவயாணி'
திமுக கொடியுடன் பாட்டி ஒருவர் பேருந்தை வழிமறித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
Recommended Video
ஆம்பூர்: வயதான பெண் ஒருவர், தேசிய நெடுஞ்சாலையில் திமுக கொடியுடன் பேருந்தை நிறுத்திய சம்பவம் அனைத்து கட்சி தொண்டர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.
பல இடங்களில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
எனினும் சில மாவட்டங்களில் ஒரு சில அரசு பேருந்துகள் பலத்த பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. அதன்படி திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து வேலூருக்கு அரசு பேருந்து சில சென்று கொண்டு இருந்தன.
இன்று காலை 9 மணிக்கு ஆம்பூர் நகர திமுகவினர் அனைவரும் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே ஒன்றுகூட வேண்டும் என ந.செ ஆறுமுகம் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி ஆம்பூர் 28வது வார்டில் வசிக்கும் நகர மகளிர் அணியின் துணை செயலாளர் தேவயாணி என்கிற 60 வயது பாட்டி 8.30 மணிக்கே பேருந்து நிலையம் அருகில் உள்ள திமுக நகர கழக அலுவலகத்துக்கு வந்துவிட்டார்.
அப்போது, திருப்பத்தூரில் இருந்து வேலூருக்கு சென்ற அரசு அதிவிரைவு பேருந்து ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு வெளியே தங்க நாற்கர சாலை ஓரம் நின்றது. அங்கு நின்றிருந்த சில பயணிகள் அந்த பேருந்தில் ஏறிக்கொண்டிருந்தனர்.
இதனை கண்ட தேவயாணி பாட்டி கடும் கோபமுற்று, "பஸ் எதுவும் ஓட்டக்கூடாதுன்னு சொல்லியும் ஓட்டுறானுங்க?" என திட்டிக்கொண்டே தள்ளாத வயதில் திமுக கொடியுடன் சாலையின் குறுக்கே தனியாளாக ஓடினார்.
அதற்குள் பேருந்து ஓட்டுநர் பேருந்தை வேகம் எடுக்க முயன்றார். ஆனால் தேவயாணி பாட்டியோ விடவில்லை. தனியாளாக கொடியுடன் சாலையின் மையத்தில் போய் நின்றுவிட்டார். இதனால் ஓட்டுநரோ பேருந்தை எடுக்க முடியாமல் நிறுத்திவிட்டார்.
"எங்களுக்காகவா பந்த் அறிவிச்சோம்? மக்களுக்காக தானே அறிவிச்சிருக்கிறோம்? உங்களுக்கெல்லாம் மக்கள் மேல அக்கறையில்லையா?" என தேவயாணி பாட்டி ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, "பஸ்ஸை எடுத்தே... கண்ணாடியை உடைச்சிடுவேன்" என தன் கையில் இருந்த கொடிக்கம்பைக் காட்டி பேச, ஓட்டுநர் அதிர்ச்சியாகி இறங்கி வந்து, 'இப்போ போய்டறோம், திரும்பி வரல' என்றார்.
திமுக உட்பட மற்ற கட்சியினர் தேவயாணியை சமாதானம் செய்தனர். அரைகுறை மனதுடன் தேவயாணி ஒப்புக்கொள்ள பேருந்து கிளம்பி சென்றது. அதன்பின் நடைபெற்ற சாலைமறியல், இரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட தேவயாணி பாட்டி கைதாகி மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
வயதான பெண்மணி ஒருவர், தேசிய நெடுஞ்சாலையில் திமுக கொடியுடன் தன்னந்தனியாளாக பேருந்தை நிறுத்திய சம்பவம் திமுக உட்பட அனைத்து கட்சி தொண்டர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.