கோடம்பாக்கம் பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாப பலி!
சென்னை: சென்னை கோடம்பாக்கம் பாலத்தின் படிகட்டில் இருந்து தவறி விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோடம்பாக்கம் வரதராஜ பேட்டையை சேர்ந்தவர் சுகுமாரன். இவர் கே.கே.நகரில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஊழியராக பணிபுரிந்தார். நேற்று மாலை கோவிலில் பணி முடிந்ததும் வீடு திரும்புவதாக செல்போனில் தகவல் கொடுத்தார். ஆனால் இரவு முழுவதும் திரும்பி வரவில்லை. எனவே அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இன்று காலை கோடம்பாக்கம் பாலத்தின் படிக்கட்டு அருகே ஒரு முதியவர் விழுந்து இறந்து கிடப்பதாகவும், தலையில் காயம் இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியா கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கவுதமன் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார். அப்போது, இரவில் புறப்பட்ட அவர் பஸ்சில் வந்து வீட்டிற்கு செல்ல படிக்கட்டில் இறங்கும் போது மழை பெய்தது. எனவே, அவர் வழுக்கி விழுந்துள்ளார்.
இதனால் தலையில் அடிபட்ட அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.