சொத்து சுகம் மட்டுமல்ல... சேர்த்து வைத்த பழைய நினைவுகளையும் அழித்த சென்னை வெள்ளம்!
சென்னை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பெரும் பொருட்சேதத்தோடு, இத்தனை காலமாய் தாங்கள் பொக்கிஷமாய் சேர்த்து வைத்த பல அரிய நினைவுப் பொருட்களையும் இழந்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இம்மாத தொடக்கத்தில் கனமழை, அதன் தொடர்ச்சியாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது என அடுத்தடுத்த சம்பவங்களால் சென்னை மாநகரமே வெள்ளக்காடானது. தண்ணீர் புகுந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
பல இடங்களில் முதல்மாடி வரை வெள்ளம் வந்ததால், மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உடுத்திய உடையோடு வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
வீடுகளுக்குத் திரும்பும் மக்கள்...
தற்போது சென்னையில் மீண்டும் வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. இதனால், வெள்ளம் வடிந்துள்ள நிலையில், மக்கள் மீண்டும் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
சேறும் சகதியுமாக வீடு...
வெள்ள நீர் புகுந்ததால் வீட்டில் உள்ள பொருட்கள், துணிமணிகள் என அனைத்தும் நாசமாகி விட்டதாக அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். தீபாவளிக்கு வாங்கிய புதுத்துணிகள், பொங்கலுக்காக வாங்கி வைத்திருந்தது என அனைத்தும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
பட்டுப்புடவைகள் நாசம்...
பெண்கள் இத்தனை ஆண்டுகாலமாய் பொக்கிஷமாய் பாதுகாத்து வந்த பட்டுப் புடவைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று ஒட்டி, சேற்று நீர் கலந்து கலர் மாறி மீண்டும் பயன்படுத்தவே முடியாத நிலைக்கு போயுள்ளது.
அத்தனையும் பாழ்...
இரண்டு ஆண் குழந்தைகளின் தாயான உமா என்பவர் இது குறித்து கூறுகையில், ‘என்னிடம் 19 பட்டுப் புடவைகள் இருந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வோர் நிறம். என் மருமகள்களுக்கு அவற்றைப் பரிசளிக்க வேண்டும் என பாதுகாத்து வைத்திருந்தேன்.
வீடு முழுவதும் நீர்...
கடந்த முறை வீட்டின் பாதியளவு மட்டுமே தண்ணீர் வந்திருந்தது. இதனால் இம்முறை வீட்டுப் பரண் மேல் பட்டுப்புடவைகளை பத்திரப்படுத்தியிருந்தேன். ஆனால், வீடு முழுவதுமே வெள்ளத்தால் மூழ்கியதால் பட்டுப்புடவைகள் அனைத்தும் பாழாகி விட்டன' என கண்ணீரோடு தெரிவித்துள்ளார்.
வீட்டுப் பத்திரங்கள்...
இதேபோல், ஒரு வயது குழந்தைக்கு தாயான விஜி என்பவர் கூறுகையில், "குழந்தையை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி, பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதிலேயே கவனமாக இருந்தோம். இதனால், வீட்டுப் பத்திரம் முதலிய முக்கிய ஆவணங்களை வீட்டுப் பரணில் வைத்து விட்டுப் போனோம். அவை அனைத்தும் நீரில் ஊறி வீணாகி விட்டன.
பயத்தில் அலறும் குழந்தை...
படகில் மீட்புக் குழுவினர் உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்ட பரபரப்பான காட்சிகளைப் பார்த்து விபரம் தெரியாத என் மகள் மிகவும் பயந்து விட்டாள். தொடர்ந்து இரவுகளில் திடுக்கிட்டு விழித்து காரணமேயில்லாமல் அழுகிறாள். இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து அவள் மீளவில்லை" என்கிறார்.
திருமண ஆல்பங்கள்...
இதேபோல், பல்வேறு வீடுகளில் வெள்ளத்தில் ஊறி வீணாய் போன திருமண ஆல்பங்களை, சிடிக்களை குப்பையில் கொட்டி வருகின்றனர். இத்தனை காலமாய் பாதுகாப்பாய் வைத்திருந்த அனைத்தும் வீணாகி விட்டதே, அதனை மீண்டும் எப்படிப் பெறுவது என்ற சோகம் அவர்களது முகத்தில் தெரிகிறது.
புதுக்குடித்தனம்...
இது குறித்து காயத்ரி என்பவர் கூறுகையில், "எங்கள் வீட்டில் ஒரு பொருள் கூட தேறவில்லை. எல்லாம் புதியதாக வாங்கி வந்து, புதுக்குடித்தனம் தான் ஆரம்பிக்க வேண்டும். டிவி, சோபா உள்ளிட்ட பொருட்களைக் கூட மீண்டும் சம்பாரித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எங்கள் திருமண ஆல்பம், சிடி போன்றவை நீரில் பாழாகி விட்டன.
உடைந்து போன நம்பிக்கை...
உறவினர் ஒருவரின் மூலம் எங்களது திருமணத்திற்கு போட்டோ, வீடியோ ரெடி செய்திருந்தோம். தற்போது அந்த உறவினரும் உயிரோடு இல்லை. எனவே, மீண்டும் அந்த ஸ்டூடியோவைக் கண்டுபிடித்து திருமணப் புகைப்படங்களை பெற முடியும் என்ற நம்பிக்கை இல்லை. எங்கள் தாத்தா, பாட்டியின் கல்யாணப் புகைப்படங்களைக் கூட நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால், என் திருமணப் புகைப்படங்களை எனது வருங்கால தலைமுறைக்கு காட்டும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே' என கலக்கத்துடன் கூறுகிறார்.