மருதமலை படக்காட்சி போல நிஜத்தில் நடந்த நகைதிருட்டு- முதியவரை வலை வீசித் தேடும் போலீசார்
திண்டிவனம்: மருதமலை படத்தில் அர்ஜுன் சொல்லியும் கேட்காமல் வடிவேலு ஒரு குற்றவாளியை அவனது வீட்டிற்கு கூட்டிச் செல்வார், வெளியில் இவர்கள் இருவரையும் இருக்க வைத்து விட்டு அந்தக் குற்றவாளி வீட்டினுள் சென்று விடுவான்.
குற்றவாளியை கோர்ட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும், உள்ளே போய் கூட்டி வாருங்கள் என்று அர்ஜுன் கூற, வடிவேலு வீட்டின் உள்ளே செல்வதற்காக கதவைத் திறப்பார் அங்கே பார்த்தால் வீடே இருக்காது.
ஒரு திறந்தவெளி மைதானம் தான் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படும், அந்தக் காட்சியைப் போலவே நிஜத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது திண்டிவனம் பகுதியில்.
சினிமா பார்த்து இளைஞர்கள் தான் திருட்டு, கொள்ளை என்று பாதை மாறிப் போகிறார்கள் என்று நினைத்தால், முதியவர் ஒருவரும் சினிமா பாணியில் நடித்து ஒரு திருட்டை நடத்தியிருக்கிறார்.
அடக் கொடுமையே என்று நினைப்பவர்கள் தொடர்ந்து மேலே படியுங்கள், சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் திண்டிவனம் பகுதியில், நகைக்கடை வைத்திருக்கும் நாகராஜ் குப்தாவின் கடைக்குள் சென்று நகை வாங்குவது போல தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பார்வையிட்டுள்ளார்.
சிறிது நேரம் நகைகளைப் பார்வையிட்டு விட்டு, மாலையில் வந்து நகைகளை வாங்கிக் கொள்கிறேன் என்று கம்பீரமாக கூறி விட்டு சென்றிருக்கிறார்.
மாலை 4 மணிக்கு ஆட்டோவில்
நேற்று மாலை மணிக்கு ஆட்டோவில் வந்த முதியவர் எங்கள் வீட்டில் வயதான நபர்கள் ( சார் ரொம்ப யங்கு போல) இருக்கின்றனர், நீங்கள் நகைகளுடன் எங்கள் வீட்டிற்கு வந்து காண்பித்தால் அவர்களுக்கு பிடித்த நகையைத் தேர்ந்தெடுத்து பணத்தை அங்கேயே கொடுத்துவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
நம்பிச் சென்ற நகைக் கடை அதிபர்
இதனை உண்மை என்று நம்பிய நகைக் கடை அதிபர் நாகராஜ் குப்தா சுமார் 120 கிராம் எடை உள்ள 6 தங்கக் சங்கிலிகளை எடுத்துக் கொண்டு , அந்த முதியவருடன் ஆட்டோவில் சென்று இருக்கிறார்.
வீட்டின் முன்புறம் நகைக்கடை அதிபர்
வீட்டின் உள்ளே நகைக்கடை அதிபரை கூட்டிச் சென்ற முதியவர் இங்கே அமருங்கள் நான் உள்ளே சென்று நகைகளைக் காட்டி விட்டு வருகிறேன், என்று உள்ளே சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
லேட்டாக சுதாரித்த நகைக்கடை அதிபர்
என்ன இவ்ளோ நேரமாகியும் ஆளைக் காணோமே என்று லேட்டாக யோசித்த நாகராஜ் குப்தா, வீட்டின் உள்ளே சென்று பார்க்க அங்கு வீட்டின் பின்புறக் கதவு திறந்து கிடந்தது. வீட்டின் முன்புறம் சென்று பார்த்தால் ஆட்டோவையும் காணவில்லை முதியவர் கிரேட் எஸ்கேப்.
வீடே சொந்தமில்ல
அய்யயோ நகை போச்சே என்று புலம்பிய நாகராஜ் குப்தா திண்டிவனம் காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுக்க, சம்பவத்தை விசாரித்த போலீசார் அந்த வீடு விற்பனைக்கு உள்ளதைத் தெரிந்து கொண்டு முதியவர் அந்த வீட்டின் சாவியை வாங்கி சென்று இந்த நாடகத்தை அரங்கேற்றி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
வயதானவரா அல்லது வேஷமிட்டு வந்தாரா
அவர் உண்மையிலேயே வயதானவரா என்பது தெரியவில்லை, திண்டிவனம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். காணாமல் போன நகைகளின் மதிப்பு சுமார் 4 லட்சம் மதிப்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
வலை வீசித் தேடும் திண்டிவனம் போலீஸ்
திண்டிவனத்தில் நகை கடை அதிபரிடம் நூதன முறையில் 15 பவுன் நகையை மோசடி செய்த முதியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.