பழைய ரூபாய் நோட்டுக்களை சிறு சேமிப்புக் கணக்குகளில் செலுத்த முடியாது... மத்திய அரசு
செல்லாத நோட்டு என்று அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய முடியாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை: அஞ்சலகங்களில் உள்ள சேமிப்புக் கணக்குகளில், செல்லாததாக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை டெபாசிட் செய்யலாம். ஆனால், வங்கிகளில் உள்ள சிறு சேமிப்புக் கணக்குகளில் செலுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. ஆனால் என்ன காரணத்துக்காக இந்த நடவடிக்கை என்பதை ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை.
சிறு சேமிப்பு கணக்கு
அஞ்சலகங்கள் உள்ளிட்ட துறைகளில் உள்ள சிறு சேமிப்புக் கணக்குகளிலும் செல்லாததாக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யக் கூடாது என்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செல்லாத நோட்டுக்கள்
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் கடும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்காக வங்கிகளில் நாள்தோறும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
கறுப்பு பணம் டெபாசிட்
பெரும் பணக்காரர்கள் தங்களிடமுள்ள கருப்புப் பணத்தை ஏழைகளிடம் கொடுத்து அவர்களின் சிறு சேமிப்புக் கணக்குகளில் செலுத்த வைப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அஞ்சலகங்களில் உள்ள சிறு சேமிப்புக் கணக்குகள் மட்டுமன்றி பொது வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி ஆகிய சிறு சேமிப்புத் திட்டங்களிலும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை டெபாசிட் செய்ய மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடைவிதித்தது. இந்நிலையில், இந்த தடையிலிருந்து அஞ்சலகங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.
சிறு சேமிப்பு திட்டங்கள்
இந்தச் சூழலில், வங்கிகளில் உள்ள சிறு சேமிப்புக் கணக்குகளிலும் செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி நேற்று புதன்கிழமை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பிபிஎப், தபால் நிலைய சேமிப்பு கள், தேசிய சேமிப்பு பத்திரங்கள் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய முடியாது.