10 வருட போராட்டம்.. 13 கிலோ மனுக்கள்.. தலையில் சுமந்து வந்த மூதாட்டி.. கடலூரில் ஒரு கண்ணீர் சம்பவம்!
தனது நிலத்தை மீட்டுத்தரக்கோரி மூதாட்டி மனு மூட்டையை தலையில் சுமந்து வந்தார்.
Recommended Video
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்கள் கோரிக்கைகளுடன் அங்கு வந்திருந்தனர். அப்போது, குண்டுபிள்ளை என்னும் மூதாட்டி, 13 கிலோ எடை கொண்ட கோரிக்கை மனுக்களை தலையில் சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
அவைகள் அனைத்தும் 10 வருடங்களாக ஆட்சியர் அலுவலகத்துக்கு கொடுத்த கோரிக்கை மனுக்களின் நகல்களாகும். நேராக ஆட்சியரிடம் வந்த குண்டுபிள்ளை, அந்த மனு மூட்டை நகல்கள், மற்றும் புதிய மனுக்களையும் சேர்த்து ஆட்சியர் தண்டபாணியிடம் கொடுத்தார்.
அதனை பெற்றுக் கொண்ட ஆட்சியர், குண்டுபிள்ளையிடம் கோரிக்கைகள் குறித்து விசாரித்தார். அதற்கு மூதாட்டி, கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்த தனது 2 ஏக்கர் நிலத்தை விழுப்புரம் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் அபகரித்து விட்டதாகவும், அதை மீட்டுத்தரக்கோரி தான் 10 வருடங்களாக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து சாதகமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் தீக்குளிக்கத்தான் வேண்டும் என்றும் மனு கொடுக்க 10 வருடங்களாக கலெக்டர் அலுவலகம் நடந்து நடந்து தான் மெலிந்துபோய்விட்டதாகவும் கண்ணீர் விட்டார்.
இதனை கேட்ட ஆட்சியர், புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தலையில் மனுக்கள் மூட்டையை சுமந்துகொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.