விருதுநகரில் வங்கிக் கணக்கில் இருந்த பணம் மாயமானதால் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி
விருதுநகரில் வங்கிக்கணக்கில் இருந்த பணம் மாயமானதால் மூதாட்டி ஒருவர் வங்கி முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார்.
விருதுநகர் : தனது கணக்கில் இருந்த பணம் மாயமானதை அறிந்த மூதாட்டி, வங்கி வாசல் முன்பு தீக்குளிக்க முயன்றதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் மூதாட்டி முத்து இருளி. இவர் அங்குள்ள தேசிய வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருந்தார். இவர் இந்த கணக்கில் கடந்தாண்டு ரூ.20 ஆயிரம் வரவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கிக்குச் சென்று பார்த்த போது, முத்து இருளி கணக்கில் ரூ.10 ஆயிரத்திற்கு மட்டுமே இருப்பதாகக் கூறி அதிகாரிகள் ரசீது கொடுத்துள்ளனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வங்கியில் உள்ள அதிகாரிகளைப் பார்த்து கேட்டதற்கு, உங்கள் கணக்கில் அவ்வளவுதான் பணம் உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மூதாட்டி முத்து இருளி அதை ஏற்காமல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், மனமுடைந்த மூதாட்டி முத்து இருளி நேற்று மாலை கையில் தூக்கு வாளியோடு வங்கிக்கு வந்தார். வங்கி வாசலில் நின்றபடி தூக்கு வாளியில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணைய தன் மீது ஊற்றி தீவைக்க முயற்சி செய்தார்.
இதைப் பார்த்த வங்கி ஊழியர்கள் அவரை தடுத்து அருப்புகோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து அங்கு வந்த போலீசார் வங்கி ஊழியர்களிடம், மூதாட்டியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.