தூத்துக்குடி அருகே பென்சன் கோரி முதியோர் நடத்திய உள்ளிருப்பு போராட்டம்!!
கோவில்பட்டி: தூத்துக்குடி அருகே முதியோர்களுக்கு பென்சன் பணம் நிறுத்தப்பட்டதால் அவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி உள்பட சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர் மாதாந்திர உதவி தொகை வழங்கி வந்தது. இந்த நிலையில் சில மாதங்களாக இவர்களுக்கு வங்கிகள் மூலம் உதவி தொகை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மாதாந்திர உதவி தொகை வழங்க கோரி கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் பல முறை மனுக்கள் அளித்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து உதவி தொகையை உடனடியாக வழங்க கோரி இலுப்பையூரணி மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த வயது முதிர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இலுப்பையூரணி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உத்தண்டராமன் தலைமையில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதில் மந்திதோப்பு கடடுமான தொழிலாளர் சங்க பொருளாளர் சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த தாசில்தார் ஜோதி உதவி தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.