கழுதைக் கல்யாணம் போய் இப்போ பன்றி பலி- மழைவேண்டி விநோத பரிகாரம்
ஓமலூர்: தமிழ்நாட்டில்தான் மழைக்காக எத்தனை எத்தனை பூஜைகள், விநோத பரிகாரங்கள் இருக்கின்றன?!...
அப்படித்தான் ஓமலூரில் உள்ள ஒரு கிராம மக்கள் மழை வேண்டி ஒரு புதிய பரிகாரத்தைச் செய்து வருகின்றனர்.
கழுதைக்கு கல்யாணம் என்பதை தாண்டி, பன்றியை பலிகொடுத்து மழை வேண்டும் அளவிற்கு வந்து நிற்கின்றனர் மக்கள்.
விவசாயிகள் ஏமாற்றம்:
அப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியாக மழை பொழியாததால் விவசாயத்தை நம்பி இருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
விநோத வழிபாடு:
இதன் காரணமாக ஓமலூரை அடுத்த பெரமச்சூர் என்ற கிராமத்தில் மழை வரவேண்டி அந்த பகுதி பொதுமக்கள் ஊரின் எல்லையில் பன்றியை பலியிட்டு வினோத வழிபாடு நடத்தினர்.
பல தலைமுறைகள் பூஜை:
இது குறித்து கூறிய பொதுமக்கள், " பல தலைமுறையாக எங்கள் ஊரில் மழை வராத காலங்களில் எல்லையில் பூஜை செய்து வருகிறோம் இதே போன்று எங்கள் முன்னோர்கள் செய்துள்ளனர்.
பன்றி பலி:
மழை வராமல் இருந்தபோது இது போன்று ஊரின் எல்லையில் இருக்கும் எல்லை முனியப்பன் கோவிலுக்கு பன்றியை பலியிட்டு உடனே மழைவந்துள்ளது . அதையே நாங்களும் பின்பற்றி வருகின்றோம்" என்றனர்.
பொரிகடலை பிரசாதம்:
பன்றியை பலியிட்டு வழிபாடு நடத்திய பின் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் பிரசாதமாக பொரி மற்றும் கடலை வழங்கினர் . இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.