கிடுகிடு விலை உயர்வு... முட்டை ‘அயிட்டங்கள்’ ரேட்டும் எகிறிடுச்சே
முட்டையின் விலை அதிகரிப்பால் ஆம்லெட் உள்ளிட்ட உணவு பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.
சென்னை: நாமக்கல்லில் முட்டையின் விலை உயர்ந்துள்ளதால் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவு பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சத்துள்ள முட்டையை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது முட்டை சைவத்தில் சேர்க்கப்பட்டுவிட்டதால் அதை பெரும்பாலான சைவ உணவு உண்போரும் உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு கடைகளில் தயார் செய்யப்படும் முட்டை மசால், முட்டை குழம்பு, முட்டை குருமா, ஆம்லெட், கலக்கி, ஆஃப் பாயில், பொடிமாஸ் உள்ளிட்ட உணவுகளை மக்கள் விரும்பி உண்கின்றனர்.
இந்நிலையில் முட்டையின் கொள்முதல் விலை கடந்த சில நாள்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது சில்லறை விலையில் ஒரு முட்டை 5 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. முட்டையால் தயாரிக்கப்படும் மேற்கண்ட உணவுகளின் விலை முன்பெல்லாம் ரூ. 10 முதல் 12-க்குள்தான் இருந்தது.
ஆனால் தற்போது முட்டையின் விலை அதிகரித்துவிட்டதால் அதன் மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருள்களின் விலையும் உயர்ந்துவிட்டது. ஒரு கடையில் புதிய விலை பட்டியலும் ஒட்டப்பட்டுவிட்டது.
அதாவது ஆம்லெட்டின் விலை ஒன்று ரூ.15, ஆஃப் பாயில் விலை ஒன்று ரூ.12, கலக்கியின் விலை ரூ.15-ம், முட்டை தொக்குவின் விலை ரூ.15 என அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் முட்டை பிரியர்கள் வேதனை அடைந்துள்ளனர்.