நாகை அருகே ஆம்னி பஸ் குளத்தில் கவிழ்ந்து விபத்து... 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி
நாகை: நாகை அருகே தனியார் ஆம்னி பேருந்து ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து பேராவூரனிக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, நேற்றிரவு இரவு 10 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்தை திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் ஓட்டினார்.
இந்தப் பேருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு மயிலாடுதுறையில் சிலபயணிகளை இறக்கிவிட்டுவிட்டு 32 பயணிகளோடு திருவாரூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது வழுவூர் என்ற ஊரைக் கடந்தபோது, எதிர்பாராதவிதமாக பேருந்து அருகில் இருந்த மின்கம்பியில் மோதி, அருகில் இருந்த குளத்தில் கவிழ்ந்தது.
இதில், மன்னார்குடியைச் சேர்ந்த விஜய் ஆண்டனியின் மகள்களான ஜான்சி மீனா என்கிற 3 வயது சிறுமி, சாகன சுபஷீ என்கிற மூன்றுமாதக் குழந்தை, பட்டுக்கோட்டையை சேர்ந்த நாடிமுத்து (33) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதோடு, பேருந்தில் இருந்த மற்ற 27 பயணிகளும் இந்த விபத்தில் காயமடைந்தனர். இவர்கள் மயிலாடுதுறை மற்றும் திருவாருர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் மின்கம்பத்தில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக, பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.