ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க 5 பேர் கொண்ட குழு- ஹைகோர்ட் கிளை உத்தரவு
ஆம்னி பேருந்துகள் கட்டண நிர்ணயம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை: ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்த செய்திகளின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் பொதுநல மனு தாக்கல் செய்தார் இந்த மனுவை, நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
கடந்த விசாரணையின் போது ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று விசாரணையின் போது, ஆம்னி பேருந்துகள் கட்டண நிர்ணயம் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த குழுவில் போக்குவரத்து துறை ஆணையர், நிதித்துறை, வருவாய்த்துறை, அதிகாரிகள் இடம் பெறுவர். கட்டண குழுவை 2 வாரங்களுக்குள் அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. குழு அமைக்கப்பட்டு 7 நாட்களில் முதல் அமர்வை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த குழு 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவின் ஆய்வறிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 12 வாரங்களில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.