பெங்களூரு வன்முறை... தமிழக ஆம்னி பஸ்கள் எரிந்து சாம்பல்... ரூ.75 கோடி இழப்பீடு தர கோரிக்கை
பெங்களூரு வன்முறை... தமிழக ஆம்னி பஸ்கள் எரிந்து சாம்பல்... 75 கோடி இழப்பீடு தர கோரிக்கை
சென்னை: காவிரி பிரச்சனையால் பெங்களூரில் வெடித்த கலவரத்தில் எரிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஆம்னி பஸ்களுக்கு 75 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று ஆம்னி பேருந்துகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
காவிரி பிரச்சனை தொடர்பாக பெங்களூருவில் கன்னட அமைப்பினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழர்களின் உடைமைகள், சொத்துக்கள், வாகனங்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. குறிப்பாக தமிழக பதிவெண் கொண்ட 100க்கும் மேற்பட்ட பேருந்துகள், லாரிகள், கார்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டன.
பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஆம்னி பேருந்துகள் சங்கத்தின் செயற்குழு இன்று சென்னையில் கூடியது. அப்போது பெங்களூருவில் எரிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு 75 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கர்நாடக அரசிடம் ஆம்னி பேருந்துகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் கர்நாடக ஆம்னி பேருந்துகள் பாதிப்பில்லாமல் இயங்குவது போல தமிழக ஆம்னி பேருந்துகள் கர்நாடகத்தில் பாதிப்பில்லாமல் இயக்கப்பட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசிடம் இச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை கர்நாடக ஆம்னி பேருந்துகள் இயங்க ஒத்துழைப்பு அளிக்கப் போவதில்லை என்றும் சங்கத்தின் செயற்குழுவில் திட்டவட்டமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேபிஎன் நிறுவன உரிமையாளர் நடராஜன் கூறுகையில், எங்களது நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்துகள் தீயில் கருகியதில் ரூ. 20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழில் போட்டி காரணமாக பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாக நாங்கள் கருதவில்லை என்று கூறினார்.