சென்னை- மதுரை ஆம்னி பஸ் கட்டணம் கிடுகிடு உயர்வு: அரசு நடவடிக்கை எடுக்குமா?
சென்னை: சென்னை- மதுரை இடையே தனியார் சொகுசு பேருந்து கட்டணம் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. எனவே அரசு கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வசூல் வேட்டை
தனியார் பேருந்து நிறுவனங்கள் தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது வழக்கம். ஆனால் தற்போது எல்லா நாட்களிலும் பயணிகளிடம் அதிக அளவில் கட்டணத்தை தனியார் பேருந்துகள் வசூலித்து வருவதாக பயணிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
உச்சத்தில் பேருந்துக் கட்டணங்கள்
மதுரை- சென்னை இடையே சாதாரணமாக ரூ. 750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு பேருந்தில் ரூ. 325 தான் வசூலிக்கிறார்கள். அதுபோல செமி சிலீப்பர் (ஏ.சி.) தனியார் பேருந்துகளில் ரூ. 900 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு விரைவு பேருந்துகளில் ரூ. 420 கட்டணம் பெறப்படுகிறது.
படுக்கை வசதி பேருந்துகள்
இது தவிர படுக்கை வசதி, ஏ.சி. வசதி செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளில் ரூ. 1100 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் இந்த கட்டணம் மேலும் அதிகரிக்கும்.
கட்டணக் கொள்ளை
இப்படி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவது, போக்குவரத்து விதிமுறைகளுக்கு மீறிய செயல் என்றும் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.