அலங்காநல்லூர், பாலமேட்டில் 14வது நாளாக பஸ் போக்குவரத்து நிறுத்தம்.. பொதுமக்கள் கடும் அவதி !
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட சுற்று பகுதிகளில் 14வது நாளாக போக்குவரத்து துண்டிக்பட்டுள்ளாதல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது தென் மாவட்டங்களில் நடத்தப்படுவது வழக்கம். உச்சநீதிமன்ற தடையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்தாண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கின் தீர்பை பொங்கலுக்கு முன்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த 16ம் தேதி முதல் மாணவர்கள், இளைஞர்கள், கிராம பொதுமக்கள் இரவு, பகலாக தொடர் போராட்டம் நடத்தினர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் வீதியில் திரண்டு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே அலங்காநல்லூரில் நடைபெற்று வந்த தொடர் போராட்டத்தின் 8வது நாளில் திடீரென போலீஸ் தடியடி நடத்தியது. இதனால் வாடிவாசல் பகுதி போர்க்களமாக மாறியது. போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். 41 பேரை கைது செய்தது.
பின்னர் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். இதன் எதிரொலியாக மதுரை நகர் பகுதி, அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
தற்போது ஜல்லிக்கட்டு அவசர சட்டம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 1-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும் அலங்காநல்லூர், பாலமேடு பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வூர்களில் ஜல்லிக்கட்டு நடந்து முடியும் வரை பாதுகாப்பு கெடுபிடி தொடரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த 14 நாட்களாக அலங்காநல்லூருக்கு பஸ் போக்குவரத்து இயக்கப்படாமல் உள்ளது. பஸ் வசதி இல்லாததால் மருத்துவமனை உள்ளிட்டவைக்கு சென்று வர முடியவில்லை எனவும், போக்குவரத்து சீர்செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.