ஊழல் அதிகாரிகள் பட்டியலை கொடுத்த ஐடி…அதிரடியில் இறங்கும் தலைமைச் செயலாளர்…பரபர தகவல்கள்
மணல் மாபியாக்களின் தலைவர் சேகர் ரெட்டி டைரியின் அடிப்படையில் ஊழல் அமைச்சர்கள், அதிகாரிகளின் பட்டியலை வருமான வரித்துறை தலைமைச் செயலாளரிடம் அளித்துள்ளது.
சென்னை : தொழில் அதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வருமான வரித்துறை பரிந்துரைத்துள்ளதால், அடுக்க கட்ட ஆக்ஷன் என்ன என்று அனைவரும் உற்று நோக்கி வருகின்றனர்.
மணல் மாபியாக்கூட்டத்தின் தலைவர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் வீட்டில்கடந்த டிசம்பர் மாதம் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது ரூ.147 கோடி பழைய ரூபாய் நோட்டுகள், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் சிறையில் உள்ள சேகர் ரெட்டி வீட்டில் நடந்த வருமான வரி சோதனையின் போது சிக்கிய ஆவணங்களில் டைரி முக்கியமானது.
இந்த டையில் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகளின் பெயர்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளன என்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள். இந்த டைரி மற்றும் பிற ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கச்சொல்லி தமிழக அரசுக்கு வருமானவரித்துறை அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இது பலரது வயிற்றில் புளியை கரைத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அடுத்தது என்ன?
முன்பெல்லாம், வருமானவரித்துறையிலிருந்து செல்லும் இது போன்ற அறிக்கைகள் தலைமை செயலாளருக்குத்தான் போகும். அப்படி போகும் கடிதம் முதலமைச்சர் மேசையிலிருந்து குப்பைத்தொட்டிக்கு போய்விழும். ஆனால் இப்போது நிலைமை வேறுமாதிரி உள்ளது. இப்போது தலைமை செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் மிகவும் ஸ்டிக்ட் ஆபீஸர். எல்லாம் சட்டப்படிதான். விதிகளின் படிதான் நடக்கவேண்டும் என ஆடர் போடும் அதிகாரி. ஊழல்வாதிகளை அவருக்கு கொஞ்சமும் பிடிக்காது என்பதால் இந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்ப வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் தலைமைச் செயலக உயர் அதிகாரிகள்.
சிக்கும் முக்கிய காக்கிகள்…
அரசியல்வாதிகளைப்போல், ஆந்திரா கும்பல் ஒன்று சட்டவிரோதமாக பொன்னேரியில் நடத்திய பான்மசாலா தயாரிப்பு தொழிற்சாலையில் நடத்திய சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக உள்ளதாம். முன்னாள் காவல்துறை ஆணையர் உள்ளிட்ட 40க்கும் அதிகமான அதிகாரிகள் பெயர்கள் லஞ்சம் பெற்ற லிஸ்ட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை பாயும் என்றும் உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முதல்வரால் தடுக்கமுடியாதா?
குழப்பமான நேரங்களில் யோசனை கேட்டு தலைமை செயலாளரிடம் சென்றால் விதிகள் என்ன சொல்கிறதோ அதையே செய்துவிடுங்கள் என்று முடித்துக்கொள்கிறாராம் முதல்வர் பழனிசாமி. அதேபோல், அலுவலக விவகாரங்கள் தாண்டி ஒரு நூல் கூட மற்ற விவகாரங்களுக்கு இடம் கொடுப்பதில்லையாம்.
ஆளுநருடன் இணக்கம்
ஓ.பி.எஸ் முதலமைச்சராக இருக்கும் போதே கறாராக நடந்து கொண்ட தலைமை செயலாளர் இடையில் ஆளுநருடன் நல்ல தகவல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதும் ஆளும் கட்சி தலைகளுக்கு தலைவலியாக இருக்கிறதாம். வருமான வரித்துறையின் அறிக்கை விவகாரத்தில் நடவடிக்கை வேண்டாம் என முதல்வர் வெளிப்படையாக கேட்பதற்கும் தடுக்கவும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள் அதிகாரிகள். அப்புறம் என்ன.. ? ரொம்ப வருடங்களுக்குப்பிறகு ஆக்சனில் குதிக்க லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.