ஈரோடு அருகே பரிதாபம்: தீயில் கருகி பாட்டி, பேத்தி பலி.. 5 பேர் மீது வழக்கு பதிவு
தீயில் கருகி பாட்டி, பேத்தி உயிரிழந்த சம்பவத்தில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு: தீயில் கருகி பாட்டியும் பேத்தியும் உயிரிழந்த சம்பவத்தில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கோட்டையார்வீதியை சேர்ந்தவர் சபுரா. இவரது பேத்தி சமீனா. சமீராவுக்கும் ஈரோடு கிருஷ்ணா வீதியை சேர்ந்த காஜாமைதீனுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஆண்குழந்தை ஒன்று உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனையடுத்து உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்துவைத்துள்ளனர். ஆனால் மீண்டும் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சமீனா தனது பாட்டி வீட்டு முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதனை கண்ட பாட்டி பேத்தியை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஈரோடு நகர காவல்துறையினர் சமீனாவை தற்கொலைக்கு தூண்டியதாக உயிரிழந்த அவரது பாட்டி சபுரா அவரது கணவர் காஜாமைதீன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.