வெள்ளத்தால் களையிழந்த ஓணம்.... பூக்கள் சோகம் - கவலையில் காய்கறிகள்
கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக ஓணம் பண்டிகை களைகட்டவில்லை. பூக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளன. காய்கறிகளும் கவலையடைந்துள்ளன. தமிழகத்திலும் காய்கறி, பூக்கள் விற்பனை களையிழந்துள்ளது.
சென்னை: மழை வெள்ளத்தால் கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இந்த ஆண்டு களைகட்டவில்லை. தமிழகத்தின் கோவை, குமரி மாவட்டத்தில் பூக்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தில் காய்கறி விற்பனை முடங்கியுள்ளது.
ஓணம் பண்டிகை என்றாலே கேரளாவில் வீடுகள் தோறும் அத்தப்பூ கோலங்கள் களைகட்டும். உறவினர்களுக்கு பலவகை காய்கறிகளால் விருந்து சமைத்து பரிமாறுவார்கள். இந்த ஆண்டு கேரளாவில் பெய்த மழை ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை பாதித்து விட்டது.
கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் கனமழை பெய்யத்தொடங்கியது. விடாது பெய்த மழையால் கேரளாவின் 14 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் வடியத்தொடங்கியிருந்தாலும் மீண்டு வருவதற்கு சிலவாரங்களாவது ஆகும்.
சீரமைப்பு பணி தீவிரம்
கேரளாவிற்கு உணவு, காய்கறி மற்றும் பால் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்தே அனுப்பப்பட்டு வருகிறது.
தற்போது கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
களை கட்டாத பண்டிகை
மழை வெள்ளத்தால் கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இந்த ஆண்டு களைகட்டவில்லை. இதனால் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பூ வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, வண்ண மலர்களால் கோலங்கள் போடப்படுவது வழக்கம். இதற்காக ஆயிரக்கணக்கான டன் பூக்கள் கோவையிலிருந்து கேரளாவிற்கு அனுப்பிவைக்கப்படும்.
பூக்கள் விற்பனை பாதிப்பு
ஓணம் பண்டிகைக்காக ஆண்டுதோறும் மல்லிகை, செண்டுமல்லி, வாடாமல்லி, சம்பங்கிபூ, என பல்வேறு வகைப்பட்ட மலர்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெறும். மழை வெள்ளத்தால் ஓணம் கொண்டாட்டம் இல்லை என்பதால் இந்த ஆண்டு பூ வியாபரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்ட வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
தோவாளை பூ மார்க்கெட்
ஓணம் பண்டிகையையொட்டி தோவளை பூ மார்க்கெட்டில் இருந்து கேரள வியாபாரிகள் அதிகளவு பூக்களை வாங்கிச் செல்வார்கள். இந்த ஆண்டு மழை காரணமாக அங்கு ஓணம் பண்டிகையின் உற்சாகம் குறைந்தே காணப்படுகிறது. இதனால் தோவாளை மார்க்கெட்டுக்கு கேரள வியாபாரிகள் வருகை குறைந்தே காணப்படுகிறது. பூக்கள் விற்பனையும் மந்தமாகவே உள்ளது.
காய்கறி விற்பனை மந்தம்
ஓணம் பண்டிகையின்போது கேரளாவில் காய்கறிகளின் தேவை அதிமாக இருக்கும். பலவகை காய்கறிகளுடன் விருந்து தயாரிப்பார்கள். இந்த ஆண்டு இதுவரை இல்லாத மழை காரணமாக கேரளா பெரும் சேதத்தை சந்தித்து உள்ளது. கேரளாவுக்கு அனுப்பப்படும் காய்கறிகள் வழக்கத்தை விட சற்று கூடுதலாக மட்டும்தான் செல்கிறது. ஓட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்பனை மந்தமாகவே உள்ளது. நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மாடுவியாபாரம் முடங்கியது
தருமபுரி மாவட்டம் அரூர் கால்நடைச் சந்தை முடங்கி, வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரூர் அருகே சேலம் பிரதான சாலையில் செயல்படும் கோபிநாதம்பட்டி மாட்டுச்சந்தையில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஏரளமான மாடுகள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும். மழைவெள்ளத்தால் கேரளாவிற்கு போக்குவரத்து முடங்கியுள்ளதால் இந்த வாரம் கேரளாவில் இருந்து வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை என்பதால் 60 லட்சம் ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.