உயிரைக் கொல்லும் மனஅழுத்தம்! இந்தியாவில்10ல் ஒருவருக்கு இருக்காம்!!
சென்னை: மனஅழுத்தம் ஒருவரை தற்கொலைக்கு தூண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்... ஆனால் ஒரு விமானத்தையே விபத்துக்குள்ளாக்கும் வகையில் மனஅழுத்தம் இருக்குமா? சமீபத்தில் நடந்த ஜெர்மனி விமான விபத்துக்கு காரணம் அந்த துணைவிமானிக்கு ஏற்பட்ட மன அழுத்தமே என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவில் 10-ல் ஒருவர் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது.
மன அழுத்தம். இந்த வார்த்தைகளை இப்போது நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். குழந்தை முதல் முதியோர் வரை எல்லா வயதினருக்கும் மன அழுத்தம் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் 80 சதவீதம் பேருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ மன அழுத்தம் காரணமாக ஏற்படும் நோய்களே அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
இந்தியாவில் மனஅழுத்தம்
உலக அளவில் மன அழுத்தம் நோய் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உலகில் உள்ள 5 பெண்களில் ஒருவரும், 10 ஆண்களில் ஒருவரும் வாழ்வில் ஒரு முறையாவது தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரையில் 10-ல் ஒருவருக்கு மன அழுத்தம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை எண்ணம்
இந்த நோயின் அறிகுறிகளாக, செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமை, வெறுமையாக உணர்வது, தன்னம்பிக்கை இழப்பது, குற்ற உணர்வு, முடிவுகள் எடுப்பதற்கு சிரமப்படுவது, ஞாபக மறதி, அதிதூக்கம் அல்லது தூக்கம் இன்மை, தற்கொலை எண்ணம் போன்றவை முக்கிய அறிகுறிகளாக கூறப்படுகிறது.
விழிப்புணர்வு
குடிப்பழக்கம், அதிகமாக புகைப்பது கூட மன அழுத்ததின் வெளிப்பாடாக இருக்கலாம். இந்தியாவில் மன அழுத்தம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. சரியான சிகிச்சை எடுத்துகொள்வதன் இந்த நோயை தீர்க்க முடியும்.
பெண்களுக்கு மனஅழுத்தம்
பெண்களுக்கோ தாமதமாகும் திருமணம், குடிகாரக் கணவர், உறவினருடன் சுமுக உறவு இல்லாதது என பல பிரச்சினைகள் மன அழுத்தத்தைக் கொண்டு வருகின்றன. முதியவர்கள் தனிமை, வெறுமை, இழப்பு, பண நெருக்கடி, நலிந்துவரும் உடல் நிலை போன்றவற்றால் மன அழுத்தம் வந்து அவதிப்படுகிறார்கள்.
உடல்நலம் பாதிப்பு
குறுகிய கால மன அழுத்தம் குறித்து பயம்கொள்ளத் தேவையில்லை. ஆனால் நாட்பட்ட மன அழுத்தத்தின் விளைவுகள் ஆபத்தானவை என்கின்றனர் நிபுணர்கள். ஒருவருக்கு மன அழுத்தம் உள்ளதா என்பதை சில அறிகுறிகள் தெரிவித்துவிடும்.
ஆனால் அவற்றை உணரும் முன்பே அது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
நோய்களின் பிறப்பிடம்
மன அழுத்தத்துக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுபவர்கள் மிகவும் குறைவு. இது அதிகமாகும்போது அது உடல் நிலையைப் பல வழிகளில் பாதிக்கும். குடிப்பழக்கம், போதைப்பழக்கம், உடல் இளைத்தல், உடற்பயிற்சியற்ற சோம்பல் வாழ்க்கைமுறை, இரைப்பைப் புண், ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி, மனப் பதற்றம், மன பயம், குடல் எரிச்சல் நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, ஆஸ்துமா, தூக்கமின்மை போன்ற பல தொல்லைகளுக்கு மன அழுத்தம் வழிவிடும்.
அடையாளம் இதுதான்
மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.
அழுத்தம் போக்கும் வெந்நீர்
வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள் என்கிறார் டாக்டர் வெஸ்டன். குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
அலையும் மேகங்கள்
அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.
காலார நடங்களேன்
நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் வெளியில் காற்றாட கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள்ளேயே அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் தருமாம்.
இசையால் இதமாகலாம்
எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசை கேளுங்கள் அல்லது வாய்விட்டு பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது கட்டுப்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.