வினுப்பிரியா தற்கொலை: ஒருவரை கைது செய்தது சேலம் போலீஸ்
சேலம்: இளம் பெண் வினுப்பிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக மேட்டூரை அடுத்த கல்பாரப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் வெளியானதால் மனமுடைந்த, சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் வினுப்பிரியா கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.
ஃபேஸ்புக்கில் வெளியான படம் குறித்து நாங்கள் புகார் அளித்த போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற விபரீதம் நடந்திருக்காது. காவல்துறையின் அலட்சியமே எங்களது மகள் உயிர் பறிபோனதற்கு காரணம் என கூறி அவரது பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் வினுப்பிரியாவின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டு அவரது பெற்றோர்கள், உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட எஸ்.பி. பேச்சுவார்த்தை
இந்நிலையில் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித்குமார் சிங், வினுப்பிரியாவின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை அவர்களிடம் காண்பித்தார்.
கைது செய்ய நடவடிக்கை
உங்கள் மகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவரை விரைவில் கைது செய்துவிட்டு, நானே உங்கள் வீட்டுக்கு வந்து தகவலை தெரிவிப்பேன். முறைகேடாக விசாரணை நடத்திய போலீசார், போன் வாங்கிய போலீஸ் ஏட்டு ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
உடல் தகனம்
பெண்கள் குறித்த புகாரில் போலீசார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.போலீசார் செய்த தவறுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று என்று அமித்குமார் சிங் இரு கை கூப்பி அவர்களிடம் தெரிவித்தார்.
வினுப்பிரிய உடல் தகனம்
இதனைத் தொடர்ந்து அவர்கள் வினுப்பிரியாவின் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர். பின்னர் வினுப்பிரியாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து உடல் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
ஒருவர் கைது
வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கல்பாரப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர். சுரேஷ் அளித்த தகவலின் பேரில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருதலைக்காதல்
கல்பாரப்பட்டியில் நெசவுத்தொழில் செய்து வரும் சுரேஷ், ஒருதலையாக வினுப்பிரியாவை காதலித்ததாகவும், தனது காதலை வினுப்பிரியா ஏற்க மறுக்கவே, இதுபோன்ற ஆபாச புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.