நடிகை ராஜஸ்ரீயிடம் நூதன முறையில் கொள்ளையடித்த நபர் கைது: நகைகள் பறிமுதல்
சென்னை: பழம்பெரும் தமிழ் சினிமா நடிகை ராஜஸ்ரீயிடம் இருந்து, ரோலக்ஸ் வாட்ச், தங்க நகைகள் போன்றவற்றை நூதனமுறையில் கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களில் நடித்திருப்பவர் ராஜஸ்ரீ. இவர் கடந்த செவ்வாயன்று தனது மகனுடன் சென்னை தி.நகரில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சென்று, லாக்கரில் வைத்திருந்த ரோலக்ஸ் வாட்ச், பழமையான தங்க, வைர நகைகள் போன்றவற்றை எடுத்துவந்தார்.
வீடு திரும்பும் முன்பாக, காரில் தனியாக இருந்த ராஜஸ்ரீயிடம் இளைஞர் ஒருவர் சாலையோரம் சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகளை காட்டி, அவருடைய பணமா எனக் கேட்டுள்ளார்.
உடனே பணத்தை எடுப்பதற்காக, ராஜஸ்ரீ காரை விட்டு, கீழே இறங்கியபோது, அந்த இளைஞர் காருக்குள் வைத்திருந்த நகைகள், ரோலக்ஸ் வாட்ச் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றார். காரில் வைத்திருந்த நகைகள் மாயமானதால் அதிர்ச்சியடைந்த ராஜஸ்ரீ, இது தொடர்பாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி கேமிரா காட்சிகளை அடிப்படையாக வைத்து, போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன்படி, திருச்சியை சேர்ந்த சர்ஃபுதின் என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து, ராஜஸ்ரீக்குச் சொந்தமான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.