தேனி கனரா வங்கியில் ரூ.1 கோடி நகை மோசடி:ஊழியர் தற்கொலை முயற்சி..பரபரப்பு
நகை மோசடியால் பொதுமக்கள் கனரா வங்கியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி: தேனியில் உள்ள கனரா வங்கியில் ரூ.1 கோடி அளவுக்கு நகை மோசடி அம்பலமானதை அடுத்து, வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டனர். மேலும் வங்கி ஊழியர் திடீர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனியில், மதுரை சாலையில் கனராவங்கி இயங்கி வருகிறது. இதில், பங்களாமேட்டை சேர்ந்த செந்தில் என்பவர் 2005ம் ஆண்டு முதல் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு வினோத் என்பவர் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர்கள் இருவரும் பொதுமக்கள் அடகு வைக்கும் நகைகளை தாங்கள் எடுத்துக் கொண்டு போலி நகைகளை தயார் செய்து வங்கியில் வைத்து மோசடி செய்து வந்துள்ளனர்.
இந்த மோசடி விவகாரம் நேற்றுதான் வங்கி நிர்வாகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து, வங்கியின் முதன்மை மேலாளர் சுப்பையா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அதனடிப்படையில் வங்கி ஊழியர்கள் செந்தில், வினோத் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே, வங்கி மோசடி குறித்து தகவல் மாவட்ட மக்களிடையே காட்டுத் தீ போல் வேகமாக பரவியது. இதனால் அடகு வைத்த வாடிக்கையாளர்கள் பதறிப் போய் நகையை மீட்க வங்கி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, அந்த வங்கியில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் நாகராஜ் என்பவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து நாகராஜை அங்கிருந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.